ஓசூரில் பறவைகள் தங்குவதற்காக காடுகள் கட்டும் இளைஞர்கள்! தமிழ்நாடு அரசும், தனியார் நிறுவனமும், தொண்டு அறக்கட்டளையுடன் இணைந்து கூட்டு முயற்சி! மியாவாக்கி காடுகள், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆங்காங்கே தோற்றுவிக்கப்படும் காடுகளால் ஓசூரில் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுமா? இந்த காடுகள் பறவைகளுக்கு ஆனது மட்டுமா அல்லது மனிதர்களுக்கும் பயன்படுமா? தெரிந்து கொள்ளலாம் வாங்க!
சுமார் 30 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, தங்களது பணத்தையும் செலவழித்து, தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே, ஜப்பானிய தாவரவியலாளர் மியாவாக்கி வழிகாட்டுதலின் அடிப்படையில், காடுகள் அமைத்து வருகிறார்கள்.
ஓசூரை அடுத்த சூளகிரி அருகே, சென்னப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, பந்தரகுட்டை என்னும் ஊரில், சின்னாறு அருகே ஓசூர் சுற்றுவட்டார பகுதியிலேயே, பெரிய அளவிலான, மியாவாக்கி காடு உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில், 50 வகையான, 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, 4 ஆண்டுகளுக்கு மரங்களை பாதுகாப்பாக வளர்த்து, காடு அமைத்துக் கொடுப்பது என உறுதி ஏற்று, இந்த இளைஞர்கள், கூட்டு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ஓசூரில் இயங்கும் SSF Plastics India Limited என்கிற தனியார் நிறுவனத்தின், சமூகப் பொறுப்பு Corporate Social Responsibility பணத்தின் பங்களிப்புடன், இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த காடுகளை, சமூக அக்கறையும், பல்வேறு இடங்களில் இத்தகைய காடுகளை அமைத்த அனுபவமும் கொண்ட, கரிசக்காட்டு பூவே அறக்கட்டளையைச் சார்ந்த இளைஞர்கள், வளர்த்து கொடுப்பதாக உறுதி ஏற்று, செயல்பட்டு வருகின்றன.
இந்த இளைஞர்களின் முயற்சியை பாராட்டி, கமென்ட் செக்ஷனில் நீங்கள் பதிவிட்டால், அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். செய்வீர்களா?
கடந்த நாள், கிருட்டிணகிரி மாவட்ட ஆட்சியர், தினேஷ்குமார் மரக்கன்றை நட்டு, காடு வளர்க்கும் பணியை துவக்கி வைத்தார். SSF Plastics நிறுவனத்தின் ஓசூர் தொழிற்சாலையின் பொது மேலாளர் பாஸ்கர், HR Manager திராவிட அரசு, HR Executive ஜெயக்கொடி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு, ரியல் எஸ்டேட்டுகளாகவும், தொழிற்பேட்டைகளாகவும் மாறிவரும் நிலையில், இத்தகைய மியாவாக்கி காடுகள் அமைப்பதால், மனிதர்களுக்கு இணையாக, இந்த புவி மீது உரிமை கொண்ட பிற உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் பல்வேறு பயன்களை தரும் என தன்னார்வலர்கள் ஓசூர் ஆன்லைன் இடம் விரிவாக எடுத்துக் கூறினர்.
மியாவாக்கி காடு என்பது, இயற்கையை பேணும் முறையில் வளங்களை விரைவாக உருவாக்கும் ஜப்பானிய முறையாகும். இது குறுகிய இடத்தில், பல்லுயிர் சூழலை உருவாக்க உதவுகிறது. பொதுவாக 30 வகை மரங்கள் நடப்படும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அடர்த்தியான காடாக வளர்கிறது.
நீர் தேவையும், பராமரிப்பும் குறைவாக இருக்கும். நகரங்களில், ஊழிநிலை மாற்றத்துக்கு எதிராக, இயற்கை கேடயம் போல இத்தகைய காடுகள் செயல்படுகிறது. பருவமழையை உறிஞ்சி நிலத்தடி நீரை உயர்த்துகிறது.
மக்கள் நலம், பசுமை சூழல், மற்றும் உயிரின பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இது பெரும் ஆதரவு அளிக்கிறது.
இத்தகைய காடுகளை, உங்கள் வீடுகளின் கொல்லைபுறம், சாலை ஓரங்களில் விடப்பட்டுள்ள இடங்கள், ஆகியவற்றிலும் எளிதாக வளர்க்கலாம்.
மாடித்தோட்டம் அமைப்பவர்கள், பல்வேறு செடிகளை, நெருக்கமாக ஒரே இடத்தில் வளர்ப்பதன் மூலம், பெருமளவு பயனீட்டலாம்.