நடிகை ச்றீதேவியின் மரணம் விபத்து அல்ல, அது கொலை: கேரள டிஜிபி

நடிகை ச்றீதேவியின் மரணம் விபத்து அல்ல, அது கொலை: கேரள டிஜிபி

புகழ்பெற்ற இந்திய நடிகை ச்றீதேவியின் மரணம் விபத்து அல்ல, அது உண்மையில் ஒரு கொலை என்று கேரள காவல் தலைமை இயக்குனர். ரிசிராஜ் சிங் கூறியுள்ள கருத்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது

ச்றீதேவியின் மரணம் கொலையாக இருக்கலாம் என்று தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர் மறைந்த மருத்துவர் உமாநாத் தம்மிடம் கூறியிருந்தார் என்று கேரள காவல் தலைமை இயக்குனர் ரிசிராஜ் சிங் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும் போது:

ச்றீதேவியின் மரணம் குறித்து அறிந்து கொள்ள அவரிடம் நான் கேட்டபோது, ச்றீதேவியின் மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் தடயங்களும் அவரது மரணம் ஒரு விபத்து அல்ல என்பதை தெரிவிப்பதாகக் கூறினார்.

கேரளாவில் பல்வேறு வழக்குகளில் மருத்துவர் உமாநாத்தின் தடயவியல் நிபுணத்துவத்தால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மருத்துவர் உமாநாத் கூறியது என்னவென்றால், நடிகை ச்றீதேவி பெருமளவில் மது குடித்துவிட்டு குளியலறையில் மூழ்கியதாகத்தான் கூறப்படுகிறது.

அப்படியே அவர் பெருமளவில் மது குடித்திருந்தாலும், வெறும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது.

வேறு ஒருவர் அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினாலே தவிர, ஒரு அடி தண்ணீரில் உறுதியாக ஒருவர் மூழ்கி உயிரிழந்திரக்க முடியாது என்று தெரிவித்ததாக காவல் தலைமை இயக்குனர் கூறியுள்ளார்.

தேவையான ஆதாரங்கள் கிடைக்காததால் ச்றீதேவியின் மரணம் மர்ம மரணமாகவே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார் கேரள காவல் தலைமை இயக்குனர்.

உடல்நலக் குறைவால் கடந்த கிழமை உயிரிழந்த மருத்துவர் உமாநாத், கேரள காவல்துறையின் மருத்துவ ஆலோசகராகவும், தடயவியல் மருத்துவ பேராசிரியராகவும் விளங்கியது குறிப்பிடத்தக்கது.



Share this Post:

தொடர்பான பதிவுகள்: