அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்காமல் காஞ்சி வரதராச பெருமாள் கோயில் கருவறையில் வைத்து வழிபட வேண்டும் என மைலம்பாடி சுதர்சன மடம் சீயர் ச்றீ நம்பி ராமானுசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைலம்பாடியில் சுதர்சன மடம் என்று ஒன்று அமைந்துள்ளது. அந்த மடத்தில் உள்ள சீயர் அத்திவரதர் குறித்து கருத்து கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது,
வரதராச பெருமாள் 40 ஆண்டுகளுக்குப் பின் தண்ணீருக்குள் இருந்து வழிபாட்டாளர்களுக்கு அருள்தர புவிக்கு எழுந்தருளி வந்துள்ளார். அவர் எழுந்தருளிய பின்னர் தான் நாட்டில் நல்ல மழை பெய்கிறது.
காஞ்சியில் தற்போது அருள்தரும் அத்தி வரதராச பெருமாளை காஞ்சி திருக்கோயில் கருவறையில் வைத்து வழிபட்டால் நாடு வளம்பெறும்.
எனவே, 48 நாட்கள் பூசைக்குப் பின் அத்திவரதரை கருவறையில் வைத்து வழிபட வேண்டும்.
இதனால் அனைத்து தரப்பு நம்பிக்கையாளர்களும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அத்திவரதரை பார்க்கும் பேறு கிடைக்கும்.
இதற்கு ஆன்மிக சான்றோர்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.