மூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிய பொறியாளர்கள்
நேரடியாக மூளையில் ஒரு இணைப்பை சொருகுவதன் மூலம் மூளை நினைப்பதை வார்த்தைகளாக மாற்றிக்காட்ட முடியுமானால், மூளையும், கணிணிகளும் நேரடித் தொடர்பில் வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றே கூறலாம்.
அறிவியலில் முதல் முறையாக, நரம்பியல் பொறியாளர்கள், மனித மூளை சிந்திப்பதை வார்த்தை வடிவமாக மாற்றும் ஒரு முறையை உருவாக்கியுள்ளனர்.
செயற்கை அறிவாற்றல் மற்றும் பேச்சு தொகுப்பு, ஆகியவற்றிற்கு இடையே தொடர்பை ஏற்படுத்தும் விதமாக, மூளையும் கணிணியும் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தும் வகையில், ஒரு வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.
கொலம்பியாவின் நரம்பியல் பொறியாளர்கள், மூளை சிந்திப்பதை புரிந்து கொள்ளும் பேச்சாக மாற்றும் ஒரு முறையை உருவாக்கியுள்ளனர்.
மூளையில் செயல்பாடுகளை கண்காணிப்பதன் மூலம், ஒருவர் என்ன சிந்திக்கிறார் என்பதை வார்த்தை வடிவில் கேட்கமுடியும்.
இந்த புதிய கண்டுபிடிப்பு, பேச்சு அமைப்பு மற்றும் செயற்கை அறிவாற்றல் இவற்றை தொடர்பாக்கி, கணிணிகள் நேரடியாக மனித மூளையுடன் தொடர்புகொள்ள ஏதுவாகும்.
விபத்தினால் பேச்சு இழந்தோர், பக்கவாதத்தினால் பேச்சு இழந்தோர் மற்றும் தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் தாக்குதல்களுக்கு உள்ளாகி பேச்சு இழந்தோர் ஆகியோர் இனி பிறருடன் பேச இயலும்.
பல ஆண்டுகளாகவே, ஆய்வாளர்கள், ஒருவர் பேச எத்தனிக்கும் போதும், பேசும் போதும், பேசுவது குறித்த சிந்தனை எழும்போதும், அவரின் மூளையில் ஒரு பதிவீட்டு பாங்கு ஏற்படுவதை கண்டறிந்துள்ளனர்.
அதே போன்று, நாம் ஒருவரின் பேச்சை கேட்கும் போதும், மூளையில் ஒருவகை தெளிவான பாங்கு ஏற்படுவதை கண்டறிந்துள்ளனர்.
பேச எத்தனிக்கும் போது, பல்வேறு பாங்குகள் உருப்பெற்றாலும், வார்த்தைகளாக பேச்சில் வருவது சில பாங்குகள் மட்டுமே.
எந்த பாங்குகளை மூளை மறைக்கிறது, எதை வார்த்தைகளாக பேச்சில் கொண்டுவருகிறது என்பதை ஆராய்வதன் மூலம், வாய் பேச்சாக இந்த எத்தனிப்புகளை கொண்டுவரலாம்.
முதலில் ஆய்வாளர்கள், மூளையில் ஏற்படும் குறிப்புகளை கணிணி உதவி கொண்டு கதிர்நிரல் வரைவை உருவாக்கி அதன் மூலம் பேச்சு தொகுப்புகளை உருவாக்க முற்பட்டனர்.
ஆனால் அது தோல்வியிலேயே முடிந்தது.
ஆகையால், பலரது பேச்சு தொக்குப்புகளை கொண்டு கணிணியில் ஒரு நெறிமுறை ஏற்படுத்தி, பேச்சு தொகுப்பி உருவாக்கி அதன் மூலம் வெற்றி கண்டுள்ளனர்.
இது ஏறத்தாள, அமேசானின் அலெக்சா மற்றும் ஆப்பிளின் சைரி ஆகியவற்றில் பயன்படும் ஒரு தொழில் நுட்பத்திற்கு ஈடானதாகும்.
இத்தகைய பேச்சு தொகுப்புகளை கொண்டு ஆராய, மூளை அறுவை மருத்துவத்திற்கு உட்படுத்தப்பட்ட பல வலிப்பு நோயாளிகளின் உதவி பெறப்பட்டது.
இன்றைய நிலையில், ஒருவர் பேச இயலாத நிலையில் இருக்கும் போது, அவரின் அடிப்படை தேவைகளை பிற மனிதர்கள் காதால் கேட்கும் வகையில் இந்த புதிய கண்டுபிடிப்பானது செயல்படுகிறது.
எடுத்துகாட்டாக, "எனக்கொரு குவழையில் தண்ணீர் வேண்டும்" என ஒருவர் மூளையில் சிந்தித்தால் அது ஒலி வடிவம் பெற்று பேச்சாக மற்றவர் காதில் ஒலிக்கும்.
இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம், ஏறத்தாள, 70 விழுக்காடு அளவிற்கு ஒருவரின் மூளை நினைப்பதை வார்த்தைகளாக (பேச்சாக) மாற்ற இயல்கிறது.