பாகம் 1 / பாடம் 5
நாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு?
நாடி பிடித்து பார்க்கும் முறைகள்.
நோய் கண்டறிவதில் முதலாவதாக வருவது நாடி பார்க்கும் முறை.
இதை, இந்த பதிவை படித்துவிட்டு உடனடியாக செயலில் இறங்கி பெரிய மருத்துவர் ஆகி விடலாம் என்று என்னினால் அது தவறு.
நாடி பிடித்து பார்த்து நோய் அறிவது என்பது ஒரு கலை. அது பல நோயாளிகளை நாடி பிடித்து பார்த்து, பழகி வந்தால் மட்டுமே, அதுவும் பல ஆண்டுகள் முயன்ற பின்னரே அதில் சிறப்புர முடியும்.
எட்டுவித ஆய்வுகள்
மருத்துவன் நோயாளியை ஆய்வு செய்யும் போது, நோக்கு, தொடு உணர்வு, கேள்வி என்னும் மூன்று வித வழிமுறைகளினால் எண் வகைப் ஆய்வுகளைச் செய்து, அவற்றின் மூலமாய் நோய்களைக் கண்டறிந்து அதற்குத் தகுந்த மருத்துவம் செய்தல் வேண்டும்.
அதாவது நோயாளியின் உடல் முதலியவற்றை கண்ணால் பார்த்தல், கைகளால் தொட்டு உணர்தல், கேள்விகள் கேட்டு நோயாளியுடன் கலந்துரையாடல், அல்லது நோயாளியின் உற்றார் உறவிணரிடம், அருகில் இருந்து கவணிப்பவரிடம் கலந்து பேசி புரிதல் முதலியவற்றால் எண் வகை ஆய்வு என்ற நாடி, உணர்தல், நா, நிறம், மொழி, விழி, மலம், சிறு நீர் என்னும் இவைகளைப் ஆய்வு செய்து அதன் மூலமாக நோய்களை கண்டறிய வேண்டும் என்பதாம்.
நாடி பார்க்கும் முறை
நாடி ஆய்வானது எட்டுவித ஆய்வுகளில் மிக முக்கியமும் நுட்பமும் வாய்ந்த தென்றும், இதனைத் தக்க ஆசானிடத்துக் கற்பினும் பன்னாள் பயிற்சியின் பிறகே நன்குணர முடியுமென்றும் அறிதல் வேண்டும்.
இந்த நாடியின் நிலையைக் கொண்டு நோய்களைக் கண்டறிவதுடன், அந்நோயின் வன்மை மென்மைகளையும், அசாத்திய மரண நிலைகளையும் நிச்சயித்துக் கூற முடியுமெனவும் அறியக் கிடக்கின்றது.
நாடியின் தோற்றமும் தொகையும் :
மனித உடலில் அடிப்படையாகவும் சூட்சமமாகவும் மூன்று கோடியே ஐம்பது லச்சம் நாடிகள் உள்ளன வென்றும், இந்நாடிகள் யாவும் மூலாதரத்தினின்றே தோன்றி மேலும், கீழும், குறுக்குமாக பரவி உடல் முழுதும் வியாபித்துள்ள வென்றும், இவைகட் கெல்லாம் ஆதாரமாயுள்ள சூட்சம வளிமமானது இந்நாடிகளின் மூலமாய் உயிரியம் முதலிய வளிமங்களை கொண்டு உடல் முழுதும் வியாபித்துள்ள வென்றும், இதுவே உடலானது உயிர் பெற்றிருப்பதற்க்குக் காரணமென்றும் அறியக்கிடக்கின்றன.
ஆனால் மேற்கூறிய நாடிகளில் எழுபத்தீராயிரம் நாடிகளே காற்று சஞ்சரிப்பதற்குப் பொருத்தமானவை.
இவற்றின் மூலமாகத்தான் உயிரியம் வளிமம் உடலின் அன்னபாணாதிகளின் சத்துக்களும், உடலில் பரவி உடலானது போஷிக்கப்பட்டு வருகின்றது.
மற்றும் இந்த எழுபத்தீராயிரம் நாடிகளில் ஆயிரத்து எழுநூற்று இரண்டு நாடிகள் ஸ்தூல நாடிக ளென்றும் மற்றவை சூட்சம நாடிக ளென்றும், இவற்றுள் இந்த அடிப்படை நாடிகளே நூறு உணர்வு ரச கந்தங்களை அறியும்படி செய்வதுடன், புசிக்கும் உணவின் ரசத்தை உடலில் வியாபிக்கச் செய்து வருகின்ற தென்றும் காணக் கிடக்கின்றது.
நாடி பார்க்கும் முறை - பத்து நாடிகள்:
மேற் கூறிய ஸ்தூல நாடிகளில் எழு நூறு நாடிகளே முக்கியமானவை யென்றும், அவற்றுள் பத்து நாடிகள் மிக முக்கியமானவை யென்றும், இதனையே தச நாடிகளென்றும் கூறப்படும்.
பத்து நாடிகளாவன:
இடகலை, பிங்கலை, சுழிமுனை, சிங்குவை, புருஷன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு என்பவை களாம்.
இடது நாசியில் இட கலையும், வலது நாசியில் பின் கலையும், பிரம்ம மந்திரத்தில் சுழி முனையும், இடது நேந்திரத்தில் காந்தாரியும், வலது நேந்திரத்தில் அத்தியும், வலது கையில் குருவும், இடது கையில் சிங்குவையும், நாவில் அலம்புடையும், ஆண்குறியில் புருடனும், சிரத்தில் சங்கினியும் வியாபித்துருக்கும்.
இவைகள் அபாணன், பிராணன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிருதரன், தேவதத்தன் ,தனஞ்செயன், எனும் பத்து வளிமங்களையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது.
இந்த பத்து வளிமங்களில் அபாணன், பிராணன், சமானன், உதானன், வியானன் என்ற ஐந்து வளிமங்கள் முக்கியமானதாகும். இவற்றுள் பிராணன் என்பது மிக தேவையானதாகும்.
திரி நாடி
மேற் கூறிய பத்து நாடியில் இட கலை, பிங் கலை, சுழி முனை என்ற மூன்று நாடிகளே பிரதானமானவை.
இட கலையானது வலது பாத பெரு விரலினின்று புறப்பட்டு மூலாதாரத்தின் மார்க்காமாய் இருதயஸ்தானத்திற்கு இடது புறமாயோடிக் கத்திரிக் கோல் மாறலென மாறி சிரசிலுள்ள சந்திர மண்டலத்தையடைந்து, இடது நாசியின் வழியாக பதினாறு அங்குலத்திற்குப் பாய்ந்து இயங்கி நிற்கும்.
பிங் கலையானது இடது பாத பெரு விரலினின்று புறப்பட்டு மூலாதாரத்தின் மார்க்காமாய் இருதயஸ்தானத்திற்கு வலது புறமாயோடிக் கத்திரிக் கோல் மாறலென மாறி, சிரசிலிருக்கும் அக்கினி மண்டலத்தையடைந்து, வலது நாசியின் வழியாக பன்னிரண்டு அங்குலத்திற்குப் பாய்ந்து இயங்கி நிற்கும்.
சுழி முனையானது இவை யிரண்டிற்கு மிடையே மூலாதாரத்தினின்று உச்சி வரையோடி சூரியமண்டலத்தையடைந்து, வலது இடது நாசித் துவாரங்களுக்கிடையே இயங்கி நிற்கும். இதுவே பிராணமயமான சீவனுக்கு இருப்பிடமாயும் உள்ளது.
மேற் கண்ட திரி நாடிகளில் இட கலையை வாத நாடியென்றும், பிங் கலையை பித்த நாடியென்றும், சுழி முனையை கப நாடியென்றும் கூறப்படும்.
நாடி பார்த்தல்
குதிச் சந்து, காமியம், உந்தி, மார்பு, காது, மூக்கு, கண்டம், கரம், புருவம், உச்சியென்னும் பத்து விடங்களிலும் நாடியைப் பார்த்தறியலாம்.
எனினும் கரமே எளிதில் அறியக் கூடியதாகவும், சுலபமாகவும் இருப்பதால், கரத்தையே நாடி பார்க்குமிடமாக வழக்கிலேற்படுத்தப் பட்டிருகின்றது.
ஆண்களுக்கு வலக்கரத்திலும், பெண்களுக்கு இடக்கரத்திலும் நாடி பார்த்தல் வேண்டும்.
பிணியாளருடைய முன்கையை நீட்டி, மணிக்கட்டிற்கு ஒரு அங்குலந்தள்ளி, பெருவிரல் பக்கமாகத் தனது மூன்று விரல்களை ஒன்றிற் கொன்று நெல்லிடைப் பிரமாண தூரத்திலுள்ளபடி மேலாகப் பொருத்தி, இலேசாக அழுத்தியும், தளர்த்தியும் பார்க்க, ஆள்காட்டி விரலிலுணர்வது வாத மென்றும், நடுலிலுணர்வது பித்த மென்றும், பெளத்திர விரலிலுணர்வது கப மென்று முணர்க.
நாடிகளின் மாத்திரை
நோயற்ற மனிதனுக்கு இயற்கையாக வாத நாடியானது ஒரு மாத்திரையாகவும், பித்த நாடியானது அரை மாத்திரையாகவும், கப நாடியானது கால் மாத்திரையாகவும் இயங்கு மென்றும், இவற்றின் நடை வேக மென்னும் மாத்திரையின் ஏற்றத் தாழ்வாகிய விகற்பத்தைக் கொண்டே வாதாதி முக் குற்றங்களின் நிலையை யறிந்து அதன் மூலமாய் நோயைக் கணிக்க வேண்டுமென்று முணர்க.
நாடி நடையும் விகற்பமும்
நாடியின் நிலையை மாத்திரைக் கணக்கில் கூறுவதுடன், எளிதில் அறியும் பொருட்டு சில உயிரிணங்களின் நடைக்கு ஒப்பிட்டுங் கூறுவதுண்டு.
அதாவது ஆண்களுக்கு வாத நாடி மயில், அன்னம், கோழி என்னும் இவைகளின் நடையை யொத்திருக்கு மென்றும், பித்தநாடி ஆமை, அட்டை முதலியவற்றின் நடையை யொத்திருக்கு மென்றும் கூறப்படும்.
சாதாரணமாக வாதத்திற்கு ஒரு மாத்திரை யென்றும் பித்தத்திற்கு அரை மாத்திரை யென்றும், கபத்திற்கு கால் மாத்திரை யென்றும், வாதம் இரண்டு மாத்திரையாயின், அதாவது இரட்டித்து வேகமாய் நடந்தால், அதனை வாதத்தில் வாதமெனவும், கபம் இரட்டித்து இருப்பின் கபத்தில் கபமெனவும், வாதம் இரண்டு மாத்திரையாகவும்,
பித்தம் ஒரு மாத்திரையாகவும் இருப்பின் அதை வாதபித்த மெனவும், வாதம் இரண்டு மாத்திரையுடன் கபம் ஒரு மாத்திரையாக இருப்பின் வாதகப மெனவும், பித்தம் இரட்டித்து வாதம் ஒன்றனால் பித்தவாத மெனவும், பித்தம் இரட்டித்து கபம் ஒன்றனால் பித்தகப மெனவும், கபம் இரட்டித்து வாதம் ஒன்றனால் கப வாதம் மெனவும், கபம் இரட்டித்து பித்தம் ஒன்றனால் கபபித்த மெனவும், வாத பித்த கபங்கள் மூன்றும் இரட்டித்து அல்லது மிக அடங்கியிருப்பின் அதனைத் திரி தோஷமெனவுங் கூறப்படும்.
நாடி விகற்பமும் நோய்களும்
வாத பித்த கபங்களாகிய முக் குற்ற நாடிகளும் முறையே தனித்தோ தொந்தித்தோ விகற்ப முற்றிருக்குங்கால் ஒவ்வொன்றிலும் காணும் நோய்களைக் குறித்து இங்கு கூறப்படும்.
அவையாவன :
வாத நாடியிற் காணும் நோய்கள்
மந்தம், வயிற்றுப்பொருமல், கிரகணி, மகோதரம், நீராமை சூலை, வாய்வு, கிருமிநோய், அண்டவாதம், மூலம், மூத்திரக் கிரிச்சரம், தந்துமேகம்.
பித்த நாடியிற் காணும் நோய்கள்
வெப்பு, உஷ்ணவாயு, அதிசாரம், அச்திசுரம், பைத்தியம், சோகை, உடற்காங்கை, எரிச்சல், தாகம், மயக்கம், மூர்ச்சை, நித்திரையின்மை, கனவு, மனக்கலக்கம், மெய்யுளைவு, பெரும்பாடு, இரத்தப் பிரமேகம்.
கப நாடியிற் காணும் நோய்கள்
சுரம், இருமல், கஷயம், ஈளை, காசம், பக்கசூலை, இருதயரோகம், வீக்கம், வாந்தி, விக்கல், நெஞ்சடைப்பு, சன்னி, விஷதோஷம், தூக்கம், பாண்டு, சோகை, காமாலை, கரப்பான், விரணம்.
வாதபித்த நாடியிற் காணும் நோய்கள்
வெப்ப காற்று, வயிற்று செரிமாண கோளாறு, புளியேப்பம், வாந்தி, அரோசகம், நாகசத்தல், நீர் சிவந்து போதல், மலங்கருகல், தாதுநட்டம், உடல்வுளைதல், சோம்பல், கைகால் அசதி, இளைப்பு.
வாதகப நாடியிற் காணும் நோய்கள்
திமிர், உளைச்சல், இருமல், சன்னி, விஷதோஷம், சூலை, இருதயரோகம், ஈளை, ம்ந்தாரகாசம், உள்வீச்சு, புறவீச்சு, வலி, மிகு சுரம்.
பித்தவாத நாடியிற் காணும் நோய்கள்
அஜீரணம், குன்மம், சூலை, மந்தம், வயிற்றிரைச்சல், கிரகணி, தாது நஷ்டம், ஆயாசம், மயக்கம், மூர்ச்சை, சுரம், முறைக் காய்ச்சல், விஷ வீக்கம், மூலவாய்வு, இரத்தக்கெடுதி.
பித்தகப நாடியிற் காணும் நோய்கள்
அஸ்திசுரம், இளைப்பு ஈளை, இரத்த விப்புருதி, உளமாந்தை, பீநசம், சுரம், வயிறுபொருமல், கண்ணோய், கண் காது மலம் நீர் இவை மஞ்சளாக இருத்தல், பாண்டு, சோபை, காமாலை.
கபபித்த நாடியிற் காணும் நோய்கள்
வீக்கம், விஷதோஷம், குளிர் காய்ச்சல், உடல் உளைச்சல், இருமல், ஈளை, வாந்தி, சுவாசம், விக்கல், வெகுசுரம், நாவறட்சி, பாண்டு, இரத்தாதிசாரம், நெஞ்சடைப்பு.
கபவாத நாடியிற் காணும் நோய்கள்
வயிறு பொருமல், வீக்கம், வாந்தி, விக்கல், வலி, சன்னி, இளைப்பு, இருமல், சோகை, பாண்டு, விடபாகம், விஷசூலை, பக்கவாதம், நாசிகாபீடம், சிரநோய்கள்.
திரிதோஷ நாடியிற் காணும் நோய்கள் சந்தி முதலியன.
அசாத்திய நாடி
அசாத்திய நாடி, மரண நாடி முதலியவைகளைக் குறித்து நூல்களில் விசேடமாகக் கூறப்பட்டிருப்பதுடன், ஒரு நாழிகை முதல் ஒரு நாளில் மரண மேற்படும் நாடி முதல், ஒரு மாதம் முதல், ஓராண்டில் மரண மேற்படும் நாடி வரையிலும், மற்றும் பலவிதமாக அசாத்திய மரண நாடிகளைக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.
இவற்றை யெல்லாம் உணர்ந்து அனுபவிப்பது மிக மிக சிரமமான காரிய மாகையாலும், அவற்றை யெல்லாம் இங்குக் கூறின் பெருகு மாகையாலும் அவற்றை விடுத்து அசாத்தியத்தை குறிக்கும் சில அடிப்படைக் கொள்கைகளை மட்டும் இங்கு கவனிப்போம்.
"வாதமாய்ப் படைத்து, பித்தவன்னியாய் காத்து, சிலேத்ம சீதமாய்த்துடைத்து" என்பதனால் ஆக்கல் இருத்தல் அழித்தல் என்னும் முத் தொழில்களை முறையே யுடைய வாதபித்த கப நாடிகளை பிரம்ம நாடி, விஷ்ணு நாடி, ருத்தி நாடி என்றுங் கூறப்படும்.
இம்மூன்று நாடிகளுக்கும் முறையே அபானன், பிராணன், சமானன் என்ற மூன்று வாயுக்கள் ஆதாரமாயுள்ளது.
இவ்வாறு பார்க்கும் போது அதில் விட்ட துளி பரவினது போல் இருப்பின் வாத தோஷமென்றும் குமிழ், குமிழாக கிளம்பின் பித்த தோஷமென்றும், முத்துப் போல் இருப்பின் ஓர் உருவாகத் தோன்றின் சுப தோஷமென்றும், கூறப்படும்.
மேலும் அந்த செய்த்துளியானது பரவி நின்றால் சாத்திய மென்றும்,மேலாக முட்டை முட்டையாக கிளம்பினால் கஷ்ட சாத்திய மென்றும், விட்ட துளி அப்படியே அழுத்தினால் அசாத்திய மென்றும், அறிய வேண்டும்.
மேலும் விட்ட துளியானது ஆமை நூகத்தடி,கலப்பை, எருது நரி, ஒட்டகம், பன்றி முதலியவற்றின் உருவங்களைப் போல் காணப்படின் அசாத்தியமாகும்.