ஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி!!!

ஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி!!!

ஓசூர் என்றாலே முதலில் மனதில் தோன்றுவது இங்கு அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஆட்டோமொபைல் தொடர்புடைய தொழிற்சாலைகளும் மற்றும் ஓசூரின் தொழில் வளமும்.
 
இன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.

காமத்திபுரா அல்லது சோனாகாசி என்று மும்பாய்,  கொல்கத்தா நகர்களின் சிவப்பு விளக்கு பகுதிகளின் பெயர்களை ஓசூருடன் இணைத்து அழைத்தாலே அதிருகிறது அல்லவா?  ஆமாம், ஓசூரில் இத்தகைய பகுதிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆயிரக்கணக்கான பள்ளி குழந்தைகள் முதல், உடல் பயிற்சிக்காக மற்றும் பொழுது போக்கிற்காக குடும்பம் குடும்பமாக வந்து செல்லும் பகுதியில் தான் இந்த ஓசூரின் சோனா காசி முழு வீச்சில் தனது தொழில் தளத்தை அமைத்துள்ளது!

ஓசூர் திருநங்கைகள்:

ஓசூரில் சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒரு கூட்டமைப்பு அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.  ஒரு சிலர் காவல் துறைக்கு உதவியாக போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலான திருநங்கைகள் கடை தெருவில் எலுமிச்சை பழம் வைத்து திருஷ்டி கழித்து அதற்கு ஒரு கட்டணம் வசூலித்து தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர்.

இந்த இரு பிரிவினராலும் யாருக்கும் எந்த பாதிப்பும் இருப்பதில்லை.  ஆனால் திருநங்கை என்ற போர்வையில் ஊடுருவியுள்ள குற்றவாளிகளால் தான் ஓசூருக்கு தீங்கு ஏற்படுகிறது.

ஓசூர் உள்வட்ட சாலை:

பெங்களூரு - கிருட்டிணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சிப்காட் பகுதி 1 -ல் அமைந்துள்ள தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக (ஈ எஸ் ஐ) மருத்துவமணை அருகில் துவங்கி சீத்தாராம் மேட்டில் முடிவடைகிறது ஓசூர் உள்வட்ட சாலை.

பல குடியிருப்பு பகுதிகளையும், தளி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை,  இராயக்கோட்டை சாலை என ஓசூரின் தலையான பகுதிகளை இது இணைக்கிறது.

இந்த உள்வட்ட சாலையை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியரும் பொது மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில், ஆங்காங்கே காவல் துறையினர் பல கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அதனால் பல குற்ற நிகழ்வுகள் தடுக்கப்பட்டு வருகின்றன.

இராம நாயக்கன் ஏரி பூங்கா:

2003 ஆம் ஆண்டு வாக்கில் ஓசூரின் சார் ஆட்சியராக திறம்பட செயலாற்றியவர் திரு ஆனந்த குமார் இ.ஆ.ப அவர்கள்.

அவரது பணியின் போது திட்டமிடப்பட்டது தான் ஓசூர் இராமநாயக்கன் ஏரி நடைபாதை மற்றும் பூங்கா.

இன்று அந்த நடைபாதை காலை வேளைகளில் நூற்றுக்கணக்கான உடற்பயிற்சி மேற்கொள்வோருக்கு ஒரு வரமாக திகழ்ந்து வருகிறது.

வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பூங்கா பகுதியில் குவிகின்றனர்.  இந்த பூங்கா பகுதியின் ஒரு முனை வேளாங்கண்ணி பள்ளி அருகில் துவங்க, முடிவு, உள்வட்ட சாலை சிச்யா பள்ளி அருகே அமைந்துள்ளது.

ஓசூரின் சிவப்பு விளக்கு பகுதி:

காலை வேளைகளில் அமைதியாக தோன்றும் இந்த பூங்கா பகுதி, நடுப்பகல் வேளையில் அதன் தன்மையை மாற்றிக்கொள்கிறது.

காதல் பறவைகள் என்ற போர்வையில், ஆணும் பெண்ணும் இணையாக ஆங்காங்கே இந்த பூங்காவினுள் பகல் சுமார் 12 மணி முதல் வரத்துவங்கி அனைத்து வித கேடுகெட்ட வேலைகளையும் மேற்கொள்கின்றனர்.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த பூங்கா பகுதியினுள் ஒழுக்கமாக வாழ நினைப்பவர்கள் யாரும் செல்ல இயலாது.  அந்த அளவிற்கு இழிவான செயல்கள் இந்த இணைகளால் நடத்தப்படுகிறது.

மாலை 5 மணி முதல் 7 மணி வரை மீண்டும் அமைதி திரும்புகிறது.

அதன் பின் இரவு நேரங்களில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளை அந்த பகுதிகளில் வண்டி ஓட்டிச்செல்லும் பெரும்பாலானோர் அறிந்திருப்பர்.

இதில், பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் ஏரிக்கரையோரம் செல்லும் உள்வட்ட சாலை ஓரம் வித விதமான ஆடைகள் உடுத்தி தமது வாடிக்கையாளர்களிடம் பேரத்தில் ஈடுபடுவர்.

திருநங்கை என்ற போர்வையில் நிற்கும் குற்ற பின்னணி உடையவர்கள், தமது கட்டுப்பாட்டில் பெண்களை இயக்குகின்றனர்.  இவர்கள் அந்த பெண்களுக்கு வாடிக்கையாளர்களை அமர்த்திக்கொடுத்து தரகு பணம் ஈட்டுகின்றனர்.

வெளியில் பார்ப்பதற்கு திருநங்கைகள் தொழில் செய்வது போல தோன்றினாலும், பூங்காவின் பெரும்பாலான பகுதி,  பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களாலும் அவர்களின் வாடிக்கையாளர்களாலும் நிறைந்துள்ளது என்பது பலரும் அறிந்திராதது.

காவல் துறையை பொறுத்தவரை, திருநங்கைகள் சாலை ஓரம் நிற்பதால், அதை ஒரு குற்றமாக பார்க்காமல், கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.  ஆனால், உண்மையில் பின்னணியில் நடப்பது கைது செய்யத்தக்க பாலியல் குற்ற நிகழ்வுகள்.

இதில் வேடிக்கையிலும் வேடிக்கை, அந்த ஏரியின் இருமருங்கிலும் காவல் துறையினர் தங்களது கட்டுப்பாட்டு அறைகளை அமைத்திருப்பது தான்.  மேலும் ஆங்கே 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதும் தான்.

வெட்கம் விட்டுச் சொல்ல வேண்டுமாயின், சாலையின் முன் பக்கம் சிச்யா பள்ளியின் பள்ளி அறைகள், பின் பக்க பூங்கா, பாலியல் தொழில் பள்ளி அறையாக செயல்படுகிறது.

இதில், பல திருடர்களும் ஒழிந்துள்ளனர்.  அவர்கள், நாடி வரும் ஆண்களை பெண் வேடமிட்டு பாலியல் தொழில் செய்வது போல அழைத்துச்சென்று,  அணிந்திருக்கும் அனைத்தையும் உருவி விட்டுவிட்டு செல்கின்றனர்.

திருநங்கைகள் வேண்டுகோள்:

ஓசூர் திருநங்கைகளின் கூட்டமைப்பு சார்பில், காவல் துறையினரிடம் இந்த குற்ற நிகழ்வுகள் குறித்து பல முறை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் காவல் துறை எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கண்டும் காணாமல் இருந்து வருகிறது.

பொது மக்கள் வேண்டுகோள்:

உள்வட்ட சாலை மற்றும் பூங்கா பகுதியை பயன்படுத்தும் பொது மக்கள் காவல் துறையிடமும், மாவட்ட மேலாண்மையிடமும் வேண்டுவது என்னவென்றால், உடனடியாக அந்த பகுதியில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, அந்த பூங்கா பகுதியை குடும்பங்களுடன் மக்கள் வந்து செல்ல ஏதுவாக மாற்றி அமைத்து தர வேண்டும் என்பது தான்.

கட்டுரை ஆசிரியர்:  சூசை பிரகாஷ் அ
தொ பே: 9788971111
மின்னஞ்சல்: info@hosuronline.com


Share this Post:

தொடர்பான பதிவுகள்: