புதிய சிந்தனைகள் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும்

புதிய சிந்தனைகள் மட்டுமே இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும்

இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சிக்கல் என்றால் நடுவன் அரசு உடனடியாக களத்தில் இறங்கி ஒரு நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பதில் யாருக்கும் எந்த கருத்து மாறுபாடும் இல்லை

எடுத்துக் காட்டாக சிலவற்றை எடுத்துக் கொண்டால், மருந்தின் விலை கடுமையாக உயர்கிறது என்றவுடன் மோடியின் அரசு மருந்துக்கான உச்ச விலையை முடிவு செய்து அதை வெளியிட்டது இரும்பின் விலை கடுமையாக உயர்கிறது என்றவுடன் ஏற்றுமதிக்கான கலால் வரி உயர்த்தப்பட்டது வெங்காய விலை கடுமையாக உயர்கிறது உள்நாட்டில் பற்றாக்குறை என்றவுடன் வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதை பொருளாதார வல்லுனர்கள் இன்றைய ஊழியில் ஏற்றுக்கொள்வதில்லை!!! 

இவற்றை அவர்கள் தவறான நடவடிக்கைகள் என்றும், நடுவன் அரசு இன்னும் பொருளாதாரம் குறித்து கற்றுக் கொள்ளவில்லை என்றும் கருதுகின்றனர்.

அரசுக்கும் பொருளாதார வல்லுனர்களுக்கும் இன்றைய ஊழியில் ஏன் இந்த சிந்தனை வேறுபாடு?

முதலில் மோடி அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளை உற்று கவனிக்கலாம். அவர் இரவோடு இரவாக கருப்புப் பணத்தை முழுமையாக ஒழித்திட வேண்டும் என்ற உயர் நோக்கில் பழைய ரூபாய்களை செல்லாது என அறிவித்தார்.

விளைவாக செல்லாத ரூபாய்க்கு பதிலாக மேற்கொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் ரிசர்வ் வங்கியை வந்தடைந்தன.   அதேபோல வரி வருவாய் குறைவாக இருக்கிறது என்பதற்காக பொருட்களின் மீதான வரி உயர்த்தப்படவேண்டும் என பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

1991 ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை வடிவமைக்கப்படும் பொழுது  இந்திய பொருளாதாரம் தனது சந்தையில் பலவகை குறைபாடுகளை கொண்டிருந்தது. மன்மோகன்சிங் அவர்கள், அதற்காக சந்தையை அரவணைத்து காக்கும் நடவடிக்கையில் இறங்காமல், பொருளாதாரத்தை பாருக்கு திறந்து விடும் நிலையை மேற்கொண்டார்.  அதனால் இந்திய பொருளாதார வளர்ச்சி கண்டது.

ஆக மோடி அரசு தொடர்ந்து பழைய பாடங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல், காக்கும் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களை குற்றம் சாட்டும் பொழுது, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை உயர்த்தியதால், உள்நாட்டில் பொருட்களுக்கான விலை உயர்ந்து, ஒவ்வொறு குடும்பமும் ஆண்டொற்றிற்கு சுமார் ஆயிரம் டாலர் அளவிற்கு கூடுதலாக செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.

இதேநிலைதான் இந்தியாவிற்கும். இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மேல் நடவடிக்கைகளில் முழுவீச்சில் நடைபெறாமல், இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது அல்லது வரிகளை உயர்த்துவது என்பதால் எவ்வகையிலும் இந்திய பொருளாதாரத்திற்கு நன்மை விளைவிக்காது.

இதே போன்று பணை (பாமாயில்) எண்ணெய் இறக்குமதியை மலேசியாவிலிருந்து தடை செய்வதால் இந்திய குடிகளுக்கு எந்த நன்மையும் விளைவிக்காது. அதற்கு பதில், அவர்கள் தமது வருவாயில் உள்ள பணத்தை அதே பொருட்களை வாங்குவதற்காக மேற்கொண்டு செலவு செய்யும் நிலைதான் வந்து சேரும். 

இதனால் அவர்கள் பிற பொருட்களை வாங்குவதை குறைத்துக்கொள்வர்.  அதன் விளைவாக மேலும் வரி வருவாய் குறையும்.  பிற துறைகளில் அதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு மேலும் வேலை இழப்புகள் ஏற்படும்.

அமேசான் இணையதளத்தின் நிறுவனர், மோடிக்கு எதிராக தனது ஊடகத்தின் மூலம் பல செய்திகளை வெளியிடுகிறார் என்ற அடிப்படையில் அவர் நிறுவனமான அமேசானிற்கு எதிராக பல நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொண்டது.  அதற்காக பல சிறு விற்பனையாளர்கள் பாதிப்படைவதாக போராட்டங்களுக்கும் வழி வகை செய்யப்பட்டது.

எதிர் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அமேசானின் வளர்சியை தடுக்க இயலவில்லை.

அத்தகைய நடவடிக்கைகளை ரிலையன்ஸ் ஜியோ மீது பிறர் குற்றம் சாட்டும் பொழுது மேற்கொள்ளவில்லை.  அதனால், இன்று குசராத்தி நிறுவனம் ஜியோ தவிற பிற நிறுவங்கள் அல்லல் படும் நிலை உள்ளது.

எங்கு போட்டிகள் தேவையோ அங்கே போட்டிகளை உருவாக்காமல், எங்கு தேவையில்லையோ அங்கே உருவாக்கி, தவறான பொருளாதார முன் நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

வேடிக்கையிலும் வேடிக்கை என்னவென்றால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜவுளித் துறையில் அமர்த்தப்படும் ஒவ்வொரு வேலை ஆளுக்கும் ஈடாக மாதம் ஒன்றுக்கு வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்திற்கு வேலை தரப்படும் நபர் ஒன்றிற்கு ரூபாய் 5000 மானியமாக வழங்கப்படுகிறது. இது எதற்கு என்றால் சீனா மற்றும் வங்க நாட்டின் ஜவுளி துறையை விலை போட்டியில் வென்று எடுப்பதற்காக.

மானியங்கள் கொடுத்து போட்டியை சமாளிக்க வேண்டும் என்ற சிந்தனையை விட்டு, பெரிய அளவிலான நிறுவனங்களை அல்லது இருக்கும் நிறுவனங்களை ஒருங்கிணைத்து பெரிய அளவில் கட்டமைப்பதே இதற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.

இந்த நடுவண் அரசு உடனடியாக புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று எதுவென்றால், எதிர் நடவடிக்கை என்பது எதிர்வினையை உருவாக்குகிறதே ஒழிய நல்வினையை அல்ல என்பதைத்தான்!

Share this Post:

தொடர்பான பதிவுகள்: