உங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்

உங்களை நீங்களே நொந்து கொள்ள பழகுங்கள்

நடுவன் அரசின் 2020-21 நிதிநிலை அறிக்கையை வளர்ச்சிக்கான அறிக்கை என்று எதிர்பார்த்து தற்பொழுது நொந்து இருக்கிறீர்கள் என்றால் உங்கள் நம்பிக்கையை தான் நீங்கள் நொந்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலான தொழில் முனைவோரும், நிதிசார் தொழில் இருப்போரும் இந்த நிதிநிலை அறிக்கை எனது தொழில் வளர்ச்சிக்கான அறிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த எதிர்பார்ப்பின் பயனாக பங்குச் சந்தை பெருமளவு வளர்ச்சி கண்டு 42,000 அளவில் சிகரம் தொட்டு நின்றது.

பல பொருளாதார நிபுணர்கள் தமது கட்டுரைகளில் 2020 நிதிநிலை அறிக்கை என்பது இந்தியாவின் மறக்க முடியாத ஒரு அறிக்கையாக இருக்கும் என்றும் அது பல ஊழிகளுக்கு தொடர்ந்து பேசப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சுமார் இரண்டரை மணி நேரம் அறிக்கையை படித்து கொண்டிருக்கும்போது அவரது பேச்சின் தாக்கத்தால் பங்குச் சந்தையானது சுமார் ஆயிரம் புள்ளிகளை இழந்து நின்றது. இது எதனால் என்றால் ஏமாற்றத்தின் விளைவே ஆகும்!

ஏமாற்றம்... அப்படித்தான் சொல்லியாகவேண்டும்!!! ஏனெனில் இந்த நிதிநிலை அறிக்கையானது வீழ்ந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை தலை நிமிர்த்தி வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது அதற்கு நேர் எதிர்மறையாக அமைந்தது.

இதில் என்ன வியப்பு என்றால் பொருளாதார மேதைகள், தொழில்முனைவோர் மற்றும் நிதிசார் எதை வைத்து நிர்மலா சீதாராமன் இடமிருந்து ஒரு பொருளாதார வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கையை எதிர்பார்த்தனர் என்பதே ஆகும்.

மோடி அரசு தொடர்ந்து ஆறு முறையாக அதாவது ஆறு ஆண்டுகளாக தவறான முன்னெடுப்பு கொண்ட நிதிநிலை அறிக்கையைதான் தந்து கொண்டிருக்கிறது.

மோடி அரசு செய்வதெல்லாம், புதிதுபுதிதாக சட்டதிட்டங்கள், மாநிலங்களிடம் இருந்து தன்னாட்சி பறிப்பு, தொழில்முனைவோர் இடையே உரசல், மக்களிடையே பிளவு, ஒரு குறிப்பிட்ட மாநிலத்தவருக்கு மட்டும் முன்னுரிமை என இதைப் போன்ற தவறான ஆளுமையை மட்டும் தான் அரசு கொண்டிருக்கிறது.

இதன் விளைவாக நாம் இன்று பொருளாதார மந்த நிலையையும், அறிவும் ஆற்றலும் கொண்ட மக்கள் வெளியேறும் நிலையையும், பணத்தின் மதிப்பு மேலும் மேலும் குறைந்து வரும் நிலையையும் உணர்ந்து வருகிறோம்.

தமக்கு ஏதுவாக எல்லாவகை புள்ளிவிவரங்களையும் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் அரசை நாம் இப்பொழுது கொண்டிருக்கிறோம்.

முதன்மை அமைச்சர் மோடி, தான் வல்லவர் சிறந்தவர் என்ற புகழை எட்ட வேண்டும் என்ற மன நிலையை மட்டுமே கொண்டிருக்கிறார். அவரது அமைச்சர்களோ எவ்வகை தகுதியும் திறனும் அற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவில் வாழ்வோரும், தொழில் முனைவோரும், பொருளாதார வல்லுனர்களும், நிதிசார் தொழிலில் இருப்போரும், ஊடகத் துறையினரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் முயற்சி தேவை என்று உணர்ந்து இருக்கும் நிலையில் மோடியும், அவர் தம் அமைச்சர்களும், அவரது அரசும் அதற்கான முன்னெடுப்பை அடுத்த சில ஆண்டுகளில் சிந்தித்து எடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: