பெண் கல்வியும், கோவிட் - 19 முடக்கமும்

பெண் கல்வியும், கோவிட் - 19 முடக்கமும்

சமூக வளர்ச்சி என்றாலே அது பெண்களின் வளர்ச்சியை அளவிட்டால் கிடைக்கப்பெறும் குறியீடு.  கல்வி நிலையிலும், பொருளாதார நிலையிலும் மற்றும் சமூக ஈடுபாட்டில் எந்த அளவிற்கு பெண்கள் பங்காற்றுகிறார்களோ அந்த அளவிற்கு அந்த சமூகம் வளர்ச்சி அடைந்துள்ளது என கணக்கீடுகள் காட்டுகின்றன.

ஐக்கிய நாடுகளின் கணக்கீட்டின்படி, ஒரு சமூகத்தின் வளர்ச்சி குறியீடு என்பது பெண் கல்வி, பெண்களின் உடல்நலம், பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி கொடுக்கப்படும் விகிதம், பெண் குழந்தை திருமணம் தவிர்த்தல், பெண்களிடம் ஏற்பட்டுள்ள எச்ஐவி தோற்று, பெண்களால் ஏற்படுத்தப்படும் குடும்ப வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.

ஒரு சமூகம் கல்வி வளர்ச்சி அடைந்திருந்தாலும் அல்லது பொருளாதார வளர்ச்சி கண்டிருந்தாலும் அந்த சமூகத்தில் பெண்கள் இந்த விடயங்களில் சிறந்து விளங்குகின்றனர் என பொருள் கொள்ளப்படுகிறது.

ஒரு பெண் கல்வி கற்றவராக இருப்பின், அவரின் குழந்தைகள் கல்வி கற்றவராக வளர்கிறார்கள்.  அவர்கள் சிறந்த குடிமக்களாக, அறிவாற்றல் கொண்டவர்களாகவும் வாழ்வில் சிறப்படைவார்கள்.

பொதுவாகவே கல்வி கற்ற பெண்கள் குறைவான பிள்ளை பெறுகிறார்கள்.  உயர் கல்வி கற்ற பெண்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறார்கள்.  அவர்கள் மேல் தொடுக்கப்படும் குடும்ப வன்செயல்கள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. பாலியல் ஏற்றத்தாழ்வுகளும் தவிர்க்கப்படுகின்றன.

பெண் கல்வி என்பது சமூகத்தின் வளர்ச்சிக்கான அடிப்படை குறியீடு என்றாலும் பெரும்பாலும் உலக அளவில் பல நாடுகளில் பெண்களுக்கு முறையான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் ஊர் புறங்களில் பெண் கல்வி:


இந்தியாவைப் பொருத்தவரை, குடும்பங்களின் மனநிலை, பெண்கள் என்றாலே வீட்டு வேலை செய்ய வேண்டும் என்பதாகும்.  பெண் குழந்தைகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு முன் தன் அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்வதை இன்றளவும் ஊர்ப்புறங்களில் எளிதாக காணலாம்.

பல நேரங்களில் வீட்டு வேலை மட்டுமல்லாது ஆடு, மாடுகள் மேய்த்தல், கழனியில் வேலை செய்தல் போன்றவற்றிற்கும் கல்வி கற்கும் பெண்கள் ஈடுபட வேண்டிய கட்டாயம், குடும்பங்களால் ஏற்படுத்தப்படுகிறது.

கல்வியில் ஆண்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை பெண்களுக்கு குடும்பங்களால் முழுமையாக பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை.

குடும்பங்கள் பொருளாதார அளவில் நலிந்து இருந்தால் அத்தகைய குடும்பங்களில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவது இயல்பான ஒன்றாக திகழ்கிறது.

தற்போதைய கோவிட்௧9 நச்சுயிரி தாக்குதலின் விளைவாக பல குடும்பங்கள் வருவாய் இன்றி தத்தம் ஊர்ப்புறங்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.

ஏற்கனவே மறுக்கப்படும் பெண்களுக்கான கல்வி உரிமை, தற்போது பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடப்பது என்பது, அவர்களை மேலும் தகவல் தொடர்பில் இருந்தும், கல்வி மற்றும் அறிவாற்றலில் இருந்தும் ஒதுக்கி வைக்க சமூகங்களுக்கு வாய்ப்பாக அமைகிறது.

இந்தச் சூழல், கல்வி பயிலும் பெண் குழந்தைகள் இளம் வயது திருமணத்திற்கு முன்னிறுத்தப்படுவதற்கும் ஏதுவாக்குகிறது.

உற்றார் உறவினரால் வீட்டில் இந்த எதிர்பாராத சூழலால் முடங்கி கிடக்கும் பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பல வாய்ப்புகள் உள்ளன.

அவர்கள் மீது சுமத்தப்படும் வீட்டு வேலைகள் மற்றும் கழனி வேலைகளும் அவர்கள் கல்வியின் மீது கொண்டுள்ள ஆர்வம் குறைவதற்கு வழிவகை செய்ய வாய்ப்புகளாக அமையக்கூடும்.

ஆகவே, அரசுகள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் கல்வி பயிலும் பெண் குழந்தைகள் குறித்தான தகவல்களை தொடர்ந்து திரட்டி, அவர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்தோங்கி நிற்க இந்த முடக்க நேரத்திலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: