தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் ஆகிய இரண்டும் வெவ்வேறானது. அவை தனி மனித மூளையில் ஏற்படுத்தும் தாக்கத்தின் தன்மைகளும் வேறுபாடு கொண்டவை.
முதலில் சொன்னது, ஒரு மனிதன் தாமாக மனமுவந்து தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொள்வது. அடுத்தது, மனிதன் பிற மனிதனை அடக்கி ஒடுக்கி தனிமைப்படுத்துவது. இதை தீண்டாமை அல்லது சமூகத்தால் விலக்கப்படுதல் அல்லது ஒரு தண்டனை எனவும் எடுத்துக்கொள்ளலாம். இந்த தனிமைப்படுத்தப்படுதலால் ஒரு மனிதனின் மூளையில் பல வருந்தத்தக்க மாற்றங்கள் நிகழ்வதாக ஆய்வின் முடிவு எடுத்துரைக்கிறது.
அடக்கி ஒடுக்கி தனிமைப்படுத்தப்படுவதால், அடக்குமுறைக்கு உள்ளாகும் மனிதனின் மூளை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி, மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு பல்வேறு தன்மைகளை மூளையானது இழந்துவிடுகிறது என ஒரு ஆய்வின் முடிவு எடுத்துறைக்கிறது.
இப்படி வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட மனிதனின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வுகள் இதுவரை நடத்தப்படாத நிலையில், அமெரிக்காவின் நரம்பியல் கழகம் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் தனது ஆய்வின் முடிவை வெளியிட்டது.
இதற்காக அந்த கழகம், சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட சில குற்றவாளிகளை தேர்வு செய்து அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தனது ஆய்வை மேற்கொண்டது.
ராபர்ட் கிங் என்பவர் தனிமைச் சிறையில் சுமார் 29 ஆண்டுகள் தனது வாழ்க்கையை கழித்துள்ளார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை நரம்பியல் கழகம் திரட்டியது.
இவரை, இவர் செய்த குற்றத்திற்காக 6 க்ஷ் 9 அடி அகலம் நீளம் கொண்ட ஒரு சிறு அறையில் 29 ஆண்டுகளாக சிறைத் தண்டனையாக அடைத்து வைத்திருந்தனர்.
இவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்
1. இவரால் மனிதர்களின் முகத்தை பார்த்து, அடையாளமாக வேறுபடுத்தி புரிந்துகொள்ள இயலவில்லை.
2. மனிதர்கள் மற்றும் சில விலங்குகளை இவரிடம் காட்டினால், இவருக்கு இரண்டு உயிரினங்களுக்குமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள இயலவில்லை.
3. ஒரு பாதையில் இவரை அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் அதே பாதையில் அவரை பயணிக்க வைத்தால், அவரால் அந்தப் பாதையின் திசைகளை புரிந்துகொள்ள இயலவில்லை.
4. ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படையான மூளை சிந்தனை அவரிடம் இல்லாமல் போய் இருப்பது கண்டறியப்பட்டது.
இவரது மூளையை நுணுகி ஆராய்ந்து நோக்கியபோது, இவரது மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதி அளவில் சிறியதாகி விட்டது கண்டறியப்பட்டது.
இந்த ஹைபோதலாமஸ் பகுதிதான், ஒரு மனிதனின் கற்றல், அடிப்படை பொது அறிவு, நினைவாற்றல் திறன் மற்றும் இடம் சார்ந்த புரிதல் ஆகிய செயல்பாடுகளை கையாள்கிறது.
மேலும் துன்பம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய அடிப்படை மூளை புரிதல்களை, ஒரு மனிதன் தனிமைப்படுத்தப்பட்டு அல்லது சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு இருந்தால் அவனது மூளை இழந்துவிடுகிறது. அதேவேளையில், பதட்டம் மற்றும் எதைக் கண்டாலும் அதை அச்சத்துடன் எதிர்கொள்ளுதல் ஆகிய தன்மைகளை மூளை வளர்த்துக் கொள்கிறது.
ஆராய்ச்சியாளர்கள், தனிமைப்படுத்தப்பட்ட மனிதர்கள் மட்டுமல்லாது, ஆய்வக எலிகளை இதேபோன்று தனிமைப்படுத்தி, மேற்கொண்டு தமது ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவில், ஒரு திங்கள் அளவிற்கு எலிகளை தனிமைப்படுத்தினாலே, அவற்றின் மூளை திறனில் 20 விழுக்காடு அளவிற்கு குறைவு ஏற்படுவதாக கண்டறிந்தனர்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்ட எலிகள் மேற்கொண்டு 2 திங்கள்கள் தனிப்படுத்தினால் மூளை அணுக்களின் வளர்ச்சி முற்றிலுமாக அற்று போனதையும் கண்டு அறிந்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட அல்லது சமூகத்தால் விலக்கப்பட்ட மனிதர்கள், பல்வேறு வகையில் தமது செயல் திறன்களை இழந்து வருகின்றனர் என்பது இந்த ஆய்வின் முடிவினால் புலப்படுகிறது.