மெய்சிலிர்த்தால் முடிகள் நேராக நிற்பது எதனால்?

மெய்சிலிர்த்தால் முடிகள் நேராக நிற்பது எதனால்?

குளிர் அல்லது உணர்ச்சிவயப்பட்ட மன நிலையில், நம்மையும் அறியாது அல்லது நமது மனதின் கட்டுப்பாட்டை மீறி, உடலில் உள்ள முடிகள் சிலிர்த்து நிற்கும்.  இது எதனால் ஏற்படுகிறது என்பதை ஆர்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

உணர்வுக்கு மட்டுமல்லாது வெளிப்புற சூழலுக்கு தக்கவாறு தோலின் மீது உள்ள நரம்புகள் சுருங்குவதால் தோல் தசை சுருக்கப்பட்டு முடிகள் நேராக நிற்கின்றன.

ஆய்வின் முடிவில், இப்படி முடிகளை நேராக நிற்க தூண்டும் அனுக்கள், முடிகளை மீண்டும் வளர்த்தெடுப்பதற்காக குருத்தணுக்களை தூண்டுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

இப்படி தசையின் அணுக்கள், நரம்புகளில் தூன்டுதலால் சுருங்கி விரிவதால், முடிக்கான குருத்தணுக்கள் தூண்டப்பட்டு, புதிய முடிவேர் தோன்றி, முடி புத்துயிர் பெற்று வளர வழிவகுக்கிறது.

பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வுகள் பல மேற்கொண்டு, அது தொடர்பில் பல விடைகளும் தந்த சார்லசு டார்வின் முதற்கொண்டு,  மெய்சிலிர்க்கும் பொழுது ஏன் மூடிகள் நேராக நிற்கிறது, என்ற வியப்பை கொண்டிருந்தனர்.

மனிதன் உள்ளிட்ட விலங்குகளுக்கு குளிர் நேரங்களில் முடி சிலிர்த்தல் என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

முதற்கட்ட ஆய்வுகளில், இப்படி மெய்சிலிர்பு ஏற்படுவதால், விலங்குகளுக்கு குளிர் ஊழிகளில், புதிய முடிகளை வளர வைத்து, குளிரிலிருந்து அவற்றை பாதுகாக்கின்றன என்பது கண்டறியப்பட்டது.

இப்படி சிலிர்க்கும் பொழுது குருத்தணுக்கள் தூண்டப்பட்டு முடி குருத்துகள் புதிதாகத் தோன்றி, புண் ஏற்பட்ட இடம் மற்றும் முடி உதிர்ந்த இடம் ஆகியவற்றில் முடி வளர வழி வகை செய்கிறது.

குருத்தணுக்கள் எவ்வாறு தூண்டப்பட்டு, நம் உடல் புதுப் பொலிவுடன் திகழ வழி வகுக்கின்றன என்பதற்கான அடிப்படையாக இந்த ஆய்வு அமைகிறது.

இந்த ஆய்வு குறித்து கருத்துரைத்த ஆய்வாளர் யா சிங் சு, "வெளி தூண்டுதலுக்கு குருத்தணுக்கள் எவ்வாறு எதிர்வினை புரிகின்றன என்பதற்கான புரிதல் ஆய்வாளர்களிடையே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.  தோல் என்பது ஒரு சிறப்பான கட்டமைப்பை கொண்டதாகும்.  தோலில் பல்வேறு வகையான குருத்தணுக்கள் உள்ளன.  உடல் கட்டமைப்பிற்கும், வெளி உலகத்திற்குமான ஒரு தொடர்பாக தோல் விளங்குகிறது. ஆகவே தோலிலுள்ள குருத்தணுக்கள், உடல் உள் உறுப்புகளின் தூண்டுதலால் மற்றும் வெளிப்புற சூழ்நிலைகளால் தூண்டப்பட்டு அதற்கொப்ப விணையாற்றுகின்றன.  இந்த ஆய்வின் மூலம், தோல் வெளிப்புற தூண்டுதலுக்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், அதனால் குருத்தணுக்கள் தூண்டப்பட்டு எத்தகைய பயனை பெற்றுக் கொள்கிறது என்பதையும் கண்டறிந்தோம்."

முடியின் அடிவேர் அமையும் பொழுது ஒருவகையான புரதத்தை வெளியேற்றி அதன்மூலம் அது அமைந்திருக்கும் தசை மற்றும் நரம்புகளுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. அதாவது, துவக்க நிலையில், முடியின் வேரானது தசை மற்றும் நரம்பை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் வகையில் அவற்றை கட்டுப்படுத்துகிறது.

முடி வளர்ச்சி அடைந்த பின், நரம்பும் தசையும் ஒருங்கிணைந்து முடியின் வேரை கட்டுப்படுத்துகின்றன. தேவை ஏற்படும்பொழுது இவை இரண்டும் சேர்ந்து முடியின் குருத்தணுக்களை தூண்டி புதிய முடியின் அடிவேர் தோன்ற வழிவகை செய்கிறது.

மனித இனத்தை பொருத்தவரை, பெண்கள் உடலில் முடி வளர்வதை விரும்புவதே இல்லை.  அழகுப் போட்டிகள் மற்றும் விளம்பர துறைகளில் பணியாற்றும் ஆண்கள் உடலில் முளைக்கும் முடிகளை அகற்றுகின்றனர்.  இப்படி இருக்க, பரிணாம வளர்ச்சியில் முடியின் தேவை கொண்ட விலங்குகளில் இருந்து பெருமளவு விலகி நிற்கும் மனிதனுக்கு ஏன் இப்படி முடி சிலிர்த்தல் ஏற்படுகிறது?

தோலின் மீதான முடி, பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதனுக்குத் தேவையில்லை என்றாலும், மெய் சிலிர்ப்பு மூலம், வெளிப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப குருத்தணுக்கள் தூண்டப்பட்டு, உள் உறுப்புகளுக்கும் அதற்கான தகவல்கள் பரிமாறிக் கொள்கின்றன.  அதற்கு ஏற்ப, உள் உறுப்புகளின் குருத்தணு செயல்பாடுகளும் தூண்டப்படுவதாக கண்டறியப்படுகிறது.

முடி சிலிர்த்து நிற்கிறது என்பது நம் உடல் கட்டமைப்பை, சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைப்பதற்காக, இயற்கை நமக்கு கொடுத்த வரம் என்று சொன்னால் மிகையில்லை.

ஆய்வு: ஆர்வர்டு பல்கலைக்கழகம்

Share this Post:

தொடர்பான பதிவுகள்: