முதலில் கருப்பு பூஞ்சான் தொற்று ஏற்படுவதாகவும், அதனால் கண் பார்வையற்று போகுதல் அல்லது மரணம் ஏற்படுத்துதல் என்பன போன்ற மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்துவதாக செய்திகள் வந்தது.
அடுத்த சில நாட்களிலேயே, வெள்ளை பூஞ்சான் தொற்று ஏற்படுவதாகவும், அதனால் உயிர் பலி ஏற்படுகின்றன என்ற செய்தியும் வந்தது.
மேற்சொன்ன இந்த இரண்டு வகை பூஞ்சான் தொற்றுகளும், தூய்மையற்ற முகக் கவசம் மற்றும் மாசடைந்த உயிர்க்காற்று பயன்படுத்துவதால் ஏற்படுவதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள், இந்த இரு பூஞ்சான் வகை தொற்றுகளால் பாதிப்படைந்து சிலருக்குக் கண்பார்வை பறிபோவதும், சிலருக்கு உயிர் பறிபோகும் நிகழ்வுகளும் ஏற்பட்டன.
இந்திய மருத்துவத்துறை இந்த இரு பூஞ்சான் தொற்றுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில், மஞ்சள் பூஞ்சை தொற்று பரவுவதாக 24 மே 2021 அன்று அதிர்ச்சி தரும் தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மஞ்சள் பூஞ்சான் தொற்று, கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சான் தொற்றை காட்டிலும் மிகக் கொடியதாக இருப்பதாகவும், இதனால் பல உயிர்ப்பலிகள் ஏற்படுவதாகவும் மருத்துவ குழுவினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
புழுக்கத்துடன் கூடிய ஈரப்பதம் நிறைந்த பகுதியில் வாழ்வதும், தூய்மை பழக்கவழக்கங்களை மேற்கொள்ளாததும், காற்றில் உள்ள நுண்ணுயிரி மற்றும் பூஞ்சான் வகைகள் ஒன்றாக சேர்ந்து நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
மஞ்சள் பூஞ்சான் தொற்று அறிகுறிகள்:
மஞ்சள் பூஞ்சான் தொற்றின் முதல் நிலை அறிகுறியாக வெளிப்படுவது, உடல் சோர்வு, கண் குழி விழுதல் உணவு உட்கொள்ள வெறுப்பு மற்றும் உடல் எடை குறைவு.
கருப்பு பூஞ்சான் போன்று வெளிப்படை அறிகுறிகள் இந்த மஞ்சள் பூஞ்சான் தொற்று வெளிப்படுத்துவது இல்லை. மாறாக, உடலுக்குள் குருதி கசிவு, குழி விழுந்த கண், என துவங்கி, அடுத்ததாக உடல் உறுப்புகளை சேதமடைய செய்கிறது.
நோய் குணப்படுத்தும் முறை:
கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சான் தொற்றுக்கு மேற்கொள்ளப்படும் அதே மருத்துவமுறைகளை இந்த மஞ்சள் பூஞ்சான் தொற்றுக்கும் மேற்கொள்ளவேண்டும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சானைவிட மஞ்சள் கொடூரம், ஏன்?
கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சான் தொற்று ஏற்பட்டால், முக வீக்கம் மற்றும் கடுமையான தலைவலி ஆகிய அறிகுறிகள் வெளிப்படுத்தும்.
மஞ்சள் பூஞ்சான் தொற்று, அறிகுறிகளை வெளிப்படுத்துவதற்கு மாறாக, உள் உறுப்புகள் சேதம் அடைய செய்கிறது.
இந்தியாவில் இதுவரை, கருப்பு பூஞ்சான் தொற்றினால், சுமார் 9 ஆயிரம் பேர் வரை மரணம் அடைந்து இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உடல் களைப்பு, கண் குழி விழுதல் மற்றும் உணவு உட்கொள்ள விருப்பம் இல்லா மனநிலை என எவ்வகை அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவர் உதவியை நாட வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.