சிடி ஸ்கேன் (CT Scan) ஆய்வு என்றால் என்ன? அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் யாவை?

சிடி ஸ்கேன் (CT Scan) ஆய்வு என்றால் என்ன?  அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் யாவை?

சிடி என்கிற ஆங்கில சொல்லிருக்கு முழு விரிவாக்கம் "கம்ப்யூட்டட் டோமொகிரபி" என்பதாகும்.  தமிழில் சொல்வதானால் "வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி".  அதாவது, ஊடுகதிர்களை குறுகிய வரியோட்டமாக கணக்கிட்டு செலுத்தி, அதன்மூலம் கிடைக்கப் பெறுகின்ற தகவலைக் கொண்டு, அந்த தகவல்களை படமாக்குதல்.

இந்த தொழில்நுட்பமானது எக்ஸ் கதிர்களையும் (X-Ray), கணினி தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி, அதன்மூலம் உடல் உறுப்புகள், எலும்புகள் மற்றும் தசைகள் ஆகியவற்றின் படத்தை வரைவதாகும்.  இந்த தொழில்நுட்பம் மூலம் கிடைக்கப்பெறும் படங்கள், வழக்கமாக பயன்படுத்தப்படும் எக்ஸ் கதிர் (X-Ray) தொழில்நுட்பத்தை காட்டிலும் தெளிவானதாக இருக்கும்.

இந்த தொழில் நுட்பம், வலி ஏதும் ஏற்படுத்தாத, குறுகிய நேரத்தில், தெளிவான உள் உறுப்புகளின் படப்பிடிப்பை நிகழ்த்த உதவுகிறது.

வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (CT Scan) எப்படி செயலாற்றுகிறது?

எக்ஸ் கதிர்களை குறுகிய கோட்டில் வரியோட்ட  சுழற்சியாக ஏற்படுத்தி, அந்த கதிர்களை, படம் பிடிக்கப்பட வேண்டிய உறுப்பின் ஊடாக செலுத்தினால், பல்வேறு கோணங்களில், உறுப்பின் குறுக்கு வெட்டு (Cross Section) படங்கள் கிடைக்கும்.

இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், ஒரு ரொட்டியை பல துண்டுகளாக வெட்டினால், எவ்வாறு ரொட்டியின் உட்புறம் தெரியவருகிறது, அதேபோன்று உறுப்பின் குறுக்கு வெட்டு பகுதிகளும் படமாக கிடைக்கும்.

இப்படி கிடைக்கப் பெறுகின்ற அடுக்கடுக்கான படங்களை, கணினி உதவியுடன் தொடர் அடுக்காக அடுக்கி, தேவைப்படும் உடல் உறுப்பு அல்லது எலும்பு அல்லது குருதி நாளங்கள் என எதை வேண்டுமானாலும் தெளிவான குறுக்குவெட்டு (Cross Section) படங்களாக பெறலாம்.
ஒரு மருத்துவர் இத்தகைய படங்களை பயன்படுத்தி, உறுப்பில் உள்ள நிறை குறைகளை கண்டறியலாம்.

வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (CT Scan) எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

மருத்துவர், எந்த உறுப்பு வரையப்பட (scan) வேண்டும் என்பதை முடிவெடுத்து, அதற்கான கோரிக்கையை கணக்கிடப்பட்ட கதிரியக்கத் துழாவற் பட வரைவி நடுவத்திற்கு (CT Scan Center) பரிந்துரைப்பார்.

அதை ஏற்று அந்த நடுவத்தின் மருத்துவர், உணவு உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் தொடர்பான அறிவுரைகளை வழங்குவார். அதற்கான தனிப்பட்ட ஆடை வழங்கப்படும்.  அணிகலன்களை அப்புறப்படுத்த அறிவுறுத்தப்படுவர்.

ஊடுகதிர் தொழில்நுட்ப வல்லுனர், இயந்திரத்தை இயக்கி, வரைதல் (scan) மேற்கொள்வார்.

CT-க்கு உட்படும் நபர், ஒரு படுக்கையின் மீது படுக்க வைக்கப்பட்டு, சிடி இயந்திரத்திற்குள் மெதுவாக உள்நகர்த்தப் படுவார். அப்படி உள் நகர்த்தப்படும் பொழுது, ஓசைகள் பல கேட்கும்.  அவை வழக்கமானதே.  உடல் அசையாமல் படுத்திருந்தால் மட்டுமே தெளிவான படங்கள் கிடைக்கும்.  எந்திரத்தை இயக்குபவர், பல நேரங்களில் மூச்சை அடக்கி பிடிக்கும்படி கட்டளையிடுவார்.

எந்த உறுப்பு வரையப்பட வேண்டும் என்பதை பொறுத்து வரைதல் (scan) நேரம் வேறுபடும்.  பொதுவாக 30 நிமிடங்களுக்குள் செயல்முறை முடிந்துவிடும்.

பக்க விளைவுகள்:

சிடி எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து மக்களிடையே குழப்பம் மிகுந்த அச்ச நிலை நிலவுகிறது.  அச்சத்திற்கு அடிப்படையாக அமைவது, சிடி முறையில் பயன்படுத்தப்படும் ஊடுகதிர் பயன்பாடு.  பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் என்று அறிந்திருந்தாலும், ஒரு நபருக்கு அதனால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் நன்மை ஏற்படும் என்றால் மட்டுமே மருத்துவர் சிடி எடுக்க பரிந்துரைக்கிறார்.

ஒரு முறை சிடி எடுப்பது, சுமார் 100 முதல் 200 எக்ஸ் கதிர் (X-Ray) படங்கள் எடுப்பதற்கு ஈடானதாகும்.   எண்ணிக்கை அடிப்படையில் பெரிதாகத் தோன்றினாலும், அதனால் ஏற்படும் பக்கவிளைவு குறைவானதே.
அதாவது, இரண்டாயிரத்தில் ஒரு பங்கு (2000:1) என்ற அளவில், மரணம் ஏற்படுத்தக்கூடிய கொடிய புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் இத்தகைய கதிர்வீச்சுக்கு உட்படுவது, புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவில் உயர்தும்.

புற்றுநோயை மட்டுமல்லாது, தோல் தடிப்பு, தோல் அரிப்பு என பல வகையான தோல் தொடர்பான நிரந்தர பக்கவிளைவுகளையும் சிடி ஆய்வு ஏற்படுத்தலாம்.

ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு நாளும், இயற்கையாக அமையப்பெற்ற பல்வேறு வகையான கதிர்வீச்சுகளுக்கு உட்படுகிறோம்.   ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக ஒவ்வொரு மனிதரும் 3 மில்லிசி-எவர்ட்ஸ் (mSv) என்ற அளவில் கதிர் வீச்சு தாக்குதல் பெறுகிறோம்.  சிடி முறையில் ஒவ்வொரு வரைதலுக்கும் (scan) 1 முதல் 10 மில்லிசி-எவர்ட்ஸ் (mSv) கதிர்வீச்சுக்கு உள்ளாக வேண்டியிருக்கும்.

இப்படி கதிர்வீச்சு தாக்குதலுக்கு உட்படுவதால் புற்றுநோய் மற்றும் பிற கடுமையான பக்கவிளைவு ஏற்படுத்தும் பேரச்சம் இருந்தாலும், மருத்துவர், ஒரு நபரின் தேவையை கருதி மட்டுமே CT பரிந்துரைப்பார்.

ஒரு நபரின் பாலினம், வயது மற்றும் எந்த பகுதி ஆய்விற்கு உட்படுகிறது என்பதை பொருத்து பக்கவிளைவை ஏற்படுத்தும்.

மார்பகங்கள், நுரையீரல், தைராய்டு சுரப்பி, மற்றும் எலும்பு மச்சை ஆகியவை வேகமாக பிரிந்து புதிய அணுக்கள் தோன்றும் அணுக்களை கொண்டுள்ள பாகங்கள் ஆகும்.  அதனால் இவற்றில் கதிர்வீச்சை செலுத்துவதால், பாதிப்பு ஏற்படுத்த தக்க, பக்க விளைவு வாய்ப்புகள் பெரிது.

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு சிடி, பக்க விளைவு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெரிதளவு ஏற்படுத்துகிறது.  

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் குழந்தைகள் வளர்ச்சிப் பருவத்தில் இருப்பதால், அவர்களின் உடல் அணுக்கள் தொடர்ந்து பிளவுபட்டு வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நேரத்தில், கதிர்வீச்சு செலுத்துவதால் அவர்களின் மரபணு அடுக்கு பாதிப்படைந்து, புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  மேலும், குறைந்த வயதினர், மேற்கொண்டு நீண்ட ஆயுள் கொண்டிருப்பதால், அவர்கள் சிடி பக்கவிளைவினால் புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்பு பெரிதாகிறது.

மாற்று முறைகள்:


ஒரு முறை சிடி ஆய்விற்கு உட்பட்டால், ஆய்வின் முடிவுகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக வைத்திருந்து, அடுத்த முறை மருத்துவர் பரிந்துரைக்கும் பொழுது, பழைய சிடி, X-Ray ஆய்வை காட்டினால், மருத்துவருக்கு ஒரு நபர் எவ்வளவு கதிர்வீச்சுக்கு உட்பட்டு இருக்கிறார் என்பது புரியும்.

பிற உடல் பகுதிகள், கதிர்வீச்சுக்கு உட்படாத வகையில் ஈயம் பொருத்திய ஆடைகளை பயன்படுத்தலாம்.

மாற்று வழிகளான, மீயொலி வரைதல் (Ultrasonic Scan) மற்றும் எம் ஆர் ஐ வரைதல் (MRI Scan) குறித்து மருத்துவரிடம் கருத்து கேட்கலாம்.

கண்டிப்பாக வேண்டும் என ஒரு மருத்துவர் கட்டாயப்படுத்தினால், வேறு ஒரு மருத்துவர் உதவியை நாடுவதும் சிறந்த வழியே!

Share this Post:

தொடர்பான பதிவுகள்: