அன்பினால் பிணைக்கப்பட்ட விலங்குகள்: மனிதனும் நாய்களும்

அன்பினால் பிணைக்கப்பட்ட விலங்குகள்: மனிதனும் நாய்களும்

மனிதனின் உற்ற நண்பன் யார் என்று கேட்டால், சின்னஞ் சிறு குழந்தையும் சொல்லும் "நாய்" என்று.

இந்த இரு விலங்குகளுக்கும் இடையேயான பிணைப்பு, "அன்பு" என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கிவிடுகிறது. மனிதனுக்குத் துணை நாய், நாய்க்கு துணை மனிதன் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த பிணைப்பு தொடர்கிறது.

உயிர்காக்கும் நண்பன்:


நாய்களால் மனிதரின் குருதியில் உள்ள சர்க்கரை அளவை முகர்ந்து பார்த்தே உணர்ந்து விட முடியும்.  தன்னை தத்தெடுத்து வளர்ப்பவர் தூங்கும் பொழுது குறைவான சர்க்கரை அளவை அவரது குருதி எட்டியுள்ளது என்றால், நாய் குரலெழுப்பி, மேலே விழுந்து புரண்டு, நக்கி அந்த மனிதரை தூக்கத்திலிருந்து எழுப்பி விடும்.  ஆய்வுகளில், 90 விழுக்காடு அளவிற்கு நாய்கள் துல்லியமாக மனிதனின் குறைந்த சர்க்கரை அளவை கண்டறிந்து உதவுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.

உணவிற்காக மட்டுமா?


நாய்களை தமது நண்பராக கொண்டிராத பலர், அவை மனிதனை சார்ந்து அன்பு காட்டுவது உணவிற்காக மட்டுமே என கருத்து சொல்வதை நம்மில் பலர் கேட்டிருக்கலாம்.

உண்மையில் மனிதர்களை நாய்கள் அன்பு செலுத்துவது தங்களுக்கு கிடைக்கும் உணவிற்காக மட்டும்தானா?  "இல்லை" என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அவை உண்மையிலேயே அன்பிற்கு அடிமைப்பட்டு, மனித இனத்திடம் நட்பு பாராட்டுவதாக உறுதி செய்துள்ளனர்.  நமது நண்பர்கள் கண் வாங்காமல் நம்மை பார்ப்பது, அன்பினால் மட்டுமே.  அப்படி அவை நம்மை நேருக்கு நேர் பார்த்து நிற்பது அன்பிற்காக ஏங்கிய நிலையை எடுத்துரைக்கிறது.

தன்னை அன்பு செய்பவர்களை அவை பார்க்கும் பார்வை வேறு, தேவையற்றவைகளை அவை நோக்கும் பார்வை வேறு.   தேவையற்றர் என உணர்ந்துவிட்டால், கூக்குரலிட்டு தனது குடும்பத்து நண்பர்களை எச்சரித்து விடும்.

நண்பரிடம் எச்சரிக்கை:


நீங்கள் உங்கள் வளர்ப்பு நண்பரை / குழந்தையை அன்பு பாராட்டுவது சிறப்பான செயல். அதேவேளையில், எச்சரிக்கையும் தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.

நாய்கள், சிறுநீர் கழித்த பின்பு மற்றும் மலம் கழித்த பின்பு, தம் நாவின் துணையுடன், தன் கழிவு உறுப்புக்களை தூய்மைப்படுத்திக் கொள்ளும் பழக்கம் கொண்டவை.  தூய்மையற்ற பொருட்களைக் கூட பல நேரங்களில், நக்கிப் பார்த்து உணர்ந்து கொள்ளும்.

இப்படியான அவற்றின் பழக்கத்தால், அவற்றின் வாய்ப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான தொற்று ஏற்படுத்தும் மற்றும் தீங்கிழைக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு.  பொதுவாக டைபாய்டு காய்ச்சல் ஏற்படுத்தும் நுண்ணுயிரி மற்றும் வயிற்றளைச்சல் ஏற்படுத்தும் காம்பிலோ-பாக்டர் நுண்ணுயிரி போன்ற நோய்களை ஏற்படுத்தும் நுண்கிருமிகள் அவற்றின் வாய் பகுதியில் வாழ்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நீங்கள் உங்கள் செல்லத்தை உங்கள் முகம், மூக்கு, வாய், கண் போன்றவற்றை முத்தமிட - நாக்கால் நக்குவதற்கு அனுமதிப்பதன் மூலம், இந்த நோய் தொற்றுகளை நீங்கள் பெறலாம்.

வளர்ப்பினங்களுக்கு உங்கள் நோய்:


மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய் தொற்றுக்கள், பிற விலங்கினங்களுக்கும் மனிதர்களிடமிருந்து பரப்புவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

உங்களால் உங்கள் நாய் நோய்வாய் படலாம்.  நோய்த்தொற்று உள்ள மனிதர்கள் வளர்ப்பு உயிரினத்திடம் இருந்து விலகி இருப்பது அந்த உயிர்களுக்கு நல்லது.

பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்ட மனிதர்களிடமிருந்து நாய்கள் மற்றும் பிற விலங்கினங்களுக்கு அது பரவியதற்கான சான்றுகள் பல உள்ளன.

கொரோனா தொற்று மனிதர்களிடமிருந்து நாய் உள்ளிட்ட பிற விலங்கினங்களுக்கு பரவி வருகின்றன. மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதருக்கும், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் (Bacteria) மற்றும் தீநுண்மிகள் (Virus) பரவுவது ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளன.

நாய்களும் உங்கள் மொழியும்:


நீங்கள் பேசுகின்ற சொற்களில் சுமார் 250 சொற்களை நாய்களால் புரிந்து கொள்ள முடியும் என்றால் பலருக்கு அது வியப்பே!  இது இரண்டு வயது மனித குழந்தையின் புரிந்து கொள்ளும் தன்மைக்கு ஒத்தது.

பார்டர் கோலி, பூடுல், ஜெர்மன் ஷெப்பர்ட், கோல்டன் ரெட்ரீவர், டாபர்மேன் போன்ற இனங்களால், மனிதர்களின் பேச்சு சொற்றொடர்களை கூட புரிந்து கொள்ள முடியும்.

இசையும் நாட்டியமும்:


நாய்களுக்கு இசைக்கு ஏற்ப உடலை அசைத்து நாட்டியம் ஆட தெரியும் என்றால், அது வியப்பான செய்தியாக பலருக்கு இருக்கலாம்.

உலக நாடுகள் பலவற்றில் நாய்களுடன் சேர்ந்து மனிதர்களும் நாட்டியமாடும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

சிலர் தமது ஆடைகளுக்கு ஒப்ப நாய்களுக்கும் ஆடைகளை அணிவித்து நாட்டியமாட வைப்பது மனிதர்களுக்கும் நாய்களுக்குமான உறவை மென்மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது.

வால் ஆட்டுதல் :


மனிதர்களை கண்டால் நாய்கள் வால் ஆட்டும் என்பது அனைவரும் அறிந்ததே.  வாலாட்டும் விதத்தை பொறுத்து, நாயின் மனநிலையை புரிந்து கொள்ளலாம். நாய்கள் மூன்று விதமாக வால் ஆட்டும்.

வால் நடுநிலையாக நின்று மென்மையாக ஆடினால் அது அன்பின் வெளிப்பாடு.  வால் நேர் குத்தாக நின்று, அதன் நுனி மட்டும் ஆடினால், அது போருக்கு ஆயத்தமாக இருப்பதை உணர்த்தும்.  வால் கீழே சரிந்து, வேகம் வேகமாக ஆட்டுகிறது என்றால், அது பயத்தினால் தன்னை ஒப்படைப்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.

பிறந்து 21 நாட்களுக்கும் குறைவான நாய் குட்டிகளுக்கு வாலை ஆட்ட தெரியாது.

பார்வைத்திறன்:


நாய்கள் கருப்பு வெள்ளையாக இந்த உலகத்தைப் பார்க்கும் என சொல்வது அறியாமை.  நாய்களால் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை மட்டும் பார்க்க இயலாது.

அவற்றால் கருநீலம், நீலம், சாம்பல், மஞ்சள், கரு மஞ்சள், செவலை, மற்றும் அழுத்தமான சாம்பல் நிறம் என பல நிறங்களை பார்க்க இயலும்.  மனிதர்களைக் காட்டிலும் நாய்களால் மங்கிய ஒளியில் நன்றாக பார்க்க இயலும்.  

காய்ந்த மூக்கு நோயின் அறிகுறியா?


பொதுவான ஒரு நம்பிக்கை இருக்கிறது, அதாவது நாயின் மூக்கு காய்ந்து இருந்தால் அது நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது என்று.  உண்மையில் அது ஒரு தவறான புரிதல்.  

நோய்வாய்ப்பட்ட நாய் தண்ணீர் அருந்தி வந்தால், மூக்கு ஈரமாகத்தான் இருக்கும்.  சிறப்பான உடல்நிலை கொண்ட நாய் வெயிலில் படுத்து கிடந்து வந்தால், மூக்கு காய்ந்து தான் தோன்றும்.

நாய் நோய்வாய்பட்டு இருப்பதற்கான அறிகுறிகள், சோம்பலாக இருத்தல், உணவு உட்கொள்ள மறுக்கும் நிலை, வாந்தி எடுத்தல், இருமல், மற்றும் 102.5 F  மேலான மலத் துளையின் வெப்பம்.

உங்கள் நாய் நொண்டுகிறதா?


நாய் நொண்டி நடக்கிறது என்றால், அதற்கு நுரையீரல் பகுதிகள் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதன் அடையாளம் என கொள்ளலாம்.  பொதுவாக நுரையீரல் புற்றுநோய் அல்லது நுரையீரலில் தொற்று ஏற்பட்டு இருப்பதன் விளைவாக நாய்கள் தங்கள் காலை நொண்டி நடக்கும்.

பொதுவாக புற்றுநோய் அறிகுறிகள் முற்றிய நிலையில் மட்டுமே கண்டறியப்படுகின்றன.

புண்னை நக்கி சரி செய்யும்:


நாய்கள் தனது புண்களை தாமே நக்கி, அவற்றின் எச்சிலால் குணப்படுத்திக் கொள்ளும் என்பது தவறாக புரிந்து கொள்ளப்படும் புரிதல்.

உண்மையில் நாய்கள் அவற்றின் புண்களை நக்குவதால், அவற்றின் வாயில் உள்ள நுண்ணுயிரிகள் மேலும் தொற்று ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாய்களால் அவற்றின் புண்ணை நக்காமல் இருக்க இயலாது.  தொடர்ந்து நக்குவதால் புண் பெரிதாகி, மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட எலிச-பேதன் கழுத்துப்பட்டை (Elizabethan collar) பயன்படுத்த வேண்டும்.

மனிதர்களின் புகைப்பிடிக்கும் பழக்கம் நாய்களை பாதிக்கும்:


மனிதர்கள் தமது நாய்களின் முன்பு புகை பிடித்தல் அந்த வாயில்லா உயிரினங்களை புற்றுநோய்க்கு ஆளாக்குகிறது என்கின்றன ஆய்வுகள்.  சில ஆண்டுகள் புகைபிடிக்கும் மனிதருடன் சேர்ந்து வாழ்வதனாலேயே, நாய்களின் மூச்சு துவார பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது.

மனிதர்களின் புகைப்பழக்கத்தினால், சிறிய மூக்கு பகுதி கொண்ட நாய்களுக்கு நுரையீரலில் புற்றுநோய் ஏற்படுகிறது.

நாய்களும் புன்னகையும் :


நாய் வளர்ப்பவர்கள் பலர் தமது நாய் சிரிப்பதாக சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.  நாய்கள் தமது முகத்தில் புன்னகையை வெளிப்படுத்த இயலும்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: