பிகாசஸ் ஊடுருவல் மற்றும் வேவு பார்த்தல் - ஒரு பார்வை

பிகாசஸ் ஊடுருவல் மற்றும் வேவு பார்த்தல் - ஒரு பார்வை

மோடி அரசின் பிகாசஸ் ஊடுருவல் மற்றும் வேவு பார்த்தல் முறைகேடு,  நாடு முழுவதும் ஒரு பேசுபொருளாக திகழ்ந்து வரும் இந்த நிலையில், பிகாசஸ் ஊடுருவல் என்றால் என்ன? இந்திய நாட்டின் இறையாண்மையை பாதிப்பிற்கு உள்ளாக்கியதா? எவ்வாறெல்லாம் நம் கைபேசியினுள் ஊடுருவலாளர்களால் ஊடுருவ இயலும்  என்பன குறித்து நாம் தெளிவு பெற்றிருப்பது, இந்த ஊழியில் கட்டாயமாகிறது.

அமேசான் நிறுவனரின் திருமண முறிவு:


ஊடுருவல் குறித்து ஒரு தெளிவு பெற வேண்டும் என்றால், முதலில் நாம் அமேசான் நிறுவனரின் திருமணம் ஏன் முறிந்தது என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

அமேசான் நிறுவனம், ஒட்டு கேட்டு, வேவு பார்த்து, தகவல்களைத் திருடி திரட்டி, தன் தொழிலை வளர்த்துக் கொண்டது.  அலெக்சா என்கிற பெயரில், அவர்களின் ஊடுருவலும், தகவல் திருட்டுகளும் இந்த பார் அறிந்தது.

ஜெஃப் பிசோஸ் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள்.

கருத்து வேறுபாடுகள் பின்னாட்களில் இவர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  சவுதி இளவரசர், ஊடுருவல் செயலியை உள்ளடக்கிய ஒரு காணொளியை வாட்ஸப் மூலம் ஜெப் பிசோஸ் அவர்களுக்கு 2018-ஆம் ஆண்டில் அனுப்பியுள்ளார்.

காணொளியின் நகைச்சுவையை ஜெஃப் பிசோஸ் அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த சில நிமிட துளிகளை பயன்படுத்தி, அவரின் கைபேசியில் அடங்கியுள்ள, புகைப்படம் உள்ளிட்ட தனிப்பயன் தகவல்கள் திருடப்பட்டன.

ஜெஃப் பிசோஸ் -  மெக்கன்சி தம்பதியினரின் 25 ஆண்டுகள் திருமண உறவை, சவுதி அரேபிய இளவரசர் நடத்திய இந்த கைபேசி ஊடுருவல் - தகவல் திருட்டு, முடிவுக்கு கொண்டு வந்தது என்றால் பலருக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்.

ஒரு ஊடுருவலாளர் ஒருவரே, ஒரு ஊடுருவலுக்கு இரை ஆகிறார் என்றால், ஊடுருவல்கள் எத்தகைய தொழில்நுட்ப வல்லமை கொண்டு நிகழ்த்தப்படுகின்றன என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

இங்கே ஜெஃப் பிசோஸ் காணொளி ஒன்றை மட்டுமே பார்த்துள்ளார்.  எந்த செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவவில்லை. அப்படியிருந்தும் அவரின் கைபேசி ஊடுருவலாளர்களின் ஊடுருவலுக்கு உள்ளாகி இருக்கிறது.

அது எப்படி?


இது குறித்து அறிந்து கொள்ள, முதலில் நாம் Layers (லேயர்ஸ்) என்கிற நுட்பத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.  ஒரு காணொளி என்பது பல அடுக்கு படங்களைக் (Layers) கொண்டது.  இந்த அடுக்குகளுக்கு இடையே, வேவுபார்க்கும் செயலிக்கான  நிரல்களை (Program Scripts) புகுத்தி, நம் கைபேசி அல்லது கணினியிலோ ஒரு செயலியை நம் அனுமதியின்றி நிறுவி விட இயலும்!

காணொளி மட்டுமல்லாது, ஒலிப்பதிவுகள், GIF படங்கள் (கை ஆட்டுவது, கண் சிமிட்டுவது போன்ற ஒட்டு படங்களை நாம் பயன்படுத்துகிறோம் அல்லவா!), மின்னஞ்சலை திறப்பது, இணைய முகவரிகளை திறப்பது ஆகியவற்றின் மூலம் எளிதாக ஊடுருவி விட முடியும்.

இப்போது நாம் பிகாசஸ் என்றால் என்ன என்று பார்க்கலாம்!


இஸ்ரேலிய நாட்டைச்சேர்ந்த NSO என்கிற நிறுவனம், அரசுகளுக்கு அச்சுறுத்தலாய் விளங்குகிற தனிநபர்களின் கைபேசிகளை ஊடுருவி வேவு பார்த்தல் செயல்திட்டத்தை பிகாசஸ் என்கிற பெயரில் வணிகரீதியாக வழங்கியது.

இதை, இந்திய மோடி அரசு உள்ளிட்ட 10 நாடுகளின் அரசுகள், சுமார் 50,000 தனிநபர்களை வேவு பார்க்க பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.   குற்றச்சாட்டுக்கள் இப்படியிருக்க, தனது அலுவல் செய்தி குறிப்பின் மூலம் NSO நிறுவனம்,  40 நாடுகளில் 60 வாடிக்கையாளர்கள் இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

மோடி அரசைப் பொருத்தவரை, ஊடகத்தார்,  மோடி அமைச்சரவை அமைச்சர்கள், மோடி அரசில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் என பலரையும், இந்த வெளிநாட்டு வேவுபார்க்கும் நிறுவனம் மூலம், மோடி அரசின் உதவியுடன் வேவு பார்க்கப்பட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊடுருவல் தன்மையில் வேறுபாடு:


நாம் ஏற்கனவே பார்த்த முறைகளில், காணொளி பார்த்தல் அல்லது வேறு ஏதோ ஒரு செயல், நாம் பிறரிடம் இருந்து பெற்ற திரட்டில் (Data) மேற்கொள்ள வேண்டும்.  ஆனால் பிகாசஸ்-சை பொருத்தவரை, அப்படி ஏதும் நாம் செய்யத் தேவையில்லை.  அறியாத எண்களில் இருந்து வரும் அழைப்பை ஏற்காமல், அழைப்பு ஒலியை மட்டும் ஒலிக்க விட்டாலே போதும்.  அழைப்பு ஒலியின் மூலம் மட்டுமே இவர்களால் ஊடுருவிக் கொள்ள இயலுகிறது.

இந்திய அரசு சட்டம்:


இந்திய அரசின் தந்தி சட்டம், 1885 ஆம் ஆண்டு, பிரிவு 5 (2) கீழ் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் ஒற்றுமைக்கும் தேவை இருப்பின், தகவல்களை இடைமறித்து அரசு படித்துக்கொள்ளலாம்.

சட்டப்பிரிவு 419 அ, தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதற்காக என்றே 2007ஆம் ஆண்டு தந்தி சட்டத்துடன் சேர்க்கப்பட்டது.  இதன் மூலம், உள்துறை செயலாளர் அனுமதியுடன் ஒரு நபரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கலாம்.

2009 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 69 இன் கீழ்,  அரசிற்கு வேவுபார்க்கும் முறைகள், கட்டுப்பாடற்ற அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பிகாசஸ் ஊடுருவல் சட்டத்திற்குப் புறம்பானது,  ஏன்?


தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 கீழ், ஒருவரின் அனுமதியின்றி, அவரது கைபேசி மற்றும் கணினிகளை ஊடுருவி தகவல் திரட்டுதல் என்பது குற்றமாகும்.

அந்தச் சட்டத்தின் 43வது பிரிவின் கீழ், தகவல் திருடுவதற்கு என்று நச்சுநிரல்களை (Virus) நிறுவுவது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இங்கே பல பெண்களும் ஊடுருவலுக்கு ஆளாகி உள்ளனர்.  அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் திருடப்பட்டு இருக்கலாம்.  அதன் மூலம் பிறர் அத்தகைய தகவல்களை பார்த்திருக்கலாம்.  பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இது சட்ட வல்லுநர்களின் முன் புரிந்துகொள்ளப்படுகிறது.

இந்திய குடிமக்களின் தகவல்களை வெளிநாட்டு உதவியுடன் வேவு பார்ப்பது, இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

Share this Post:

தொடர்பான பதிவுகள்: