எந்த வகையான தண்ணீர் கொதிகலன் (Geyser) வாங்குவது?

எந்த வகையான தண்ணீர் கொதிகலன் (Geyser) வாங்குவது?

குளிர்காலம் வந்துவிட்டது.  தண்ணீரை சூடு ஏற்றி குளிக்க வேண்டிய சூழலும் அதனால் ஏற்பட்டுவிட்டது.  குளியலறைக்கு தண்ணீர் கொதி பொருத்திக் கொள்வது, இன்று வாழ்வின் ஒரு கட்டாய பகுதியாக மாறிவிட்டது.

இந்தச் சூழலில், எல்லோர் மனதிலும் எழும் கேள்வி என்னவென்றால், என்ன வகையான தண்ணீர் கொதிகலன் (Geyser) வாங்கி பொருத்திக் கொள்வது சிறந்தது!

குளியலறை தண்ணீர் கொதிகலன், இரண்டு வகைகளில் கிடைக்கின்றன. ஒன்று, உடனடி தண்ணீர் கொதிகலன் (Instant water heater) மற்றொன்று, தொட்டியுடன் கூடிய தண்ணீர் கொதிகலன் (Storage water heater).  இவை இரண்டில் எது குளியலறைக்கு சிறந்தது என நாம் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உடனடி தண்ணீர் கொதிகலன்:


உடனடி கொதிகலன் என்கிற சொல்லில் இருந்தே புரிந்து கொள்ளலாம், அது தண்ணீரை உடனடியாக சூடேற்றி விடும்.  பொதுவாக இத்தகைய சூடேற்றிகள், 1 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை அளவில் கிடைக்கின்றன.  

இவை பொதுவாக, 3000 வாட்ஸ் முதல் 4500 வாட்ஸ் வரையிலான மின்சாரம் பயன்படுத்தும்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, குறைந்த அளவு வெப்பநிலை குளிர்காலங்களில், 13 டிகிரி சென்டிகிரேட் வரை கீழ் செல்லும்.  பொதுவாக குளிப்பதற்கு ஏற்ற தண்ணீர் வெப்பநிலை 40 டிகிரி சென்டிகிரேட்.

உடனடி சுடுதண்ணீர் சூடேற்றி களைப் பொருத்தவரை, ஷவர் குளியல் மேற்கொள்ள அவை ஏதுவானதாக இருக்காது.  சுடு தண்ணீரை, ஒரு வாளியில் பிடித்து, அதை குளிக்கவேண்டும்.  3000 வாட்ஸ் திறன் கொண்ட ஒரு கொதிகலன், குளிப்பதற்கு ஏற்ற ஒரு வாளித் தண்ணீர் தருவதற்கு, சுமார் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

இந்தக் கணக்கின்படி மின் செலவினத்தை கணக்கிட்டால், 2 நபர்கள் குளிப்பதற்கு, 2 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படும்.

தொட்டியுடன் கூடிய தண்ணீர் கொதிகலன் (Storage water heater):


தொட்டியுடன் கூடிய தண்ணீர் கொதிகலன்கள், 15 லிட்டர் மற்றும் அதற்கு மேல் கிடைக்கிறது.  இத்தகைய கொதிகலன்கள், தண்ணீரை 75 டிகிரி வரை சூடு ஏற்றி வைத்திருக்கும்.  இவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

15 லிட்டர் சூடேற்ற சுமார், 15 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.  இவை தோராயமாக 1000 வாட்ஸ் முதல் 1500 வாட்ஸ் வரை மின்சாரத்தை பயன்படுத்தும்.

இந்தக் கணக்கின் படி, இரண்டு நபர்கள் குளிக்க, 1 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படும்.

குளியலறை தண்ணீர் கொதிகலன்களில் புதிய தொழில்நுட்பம்:


எல்லாத்துறைகளிலும், மனிதர்கள் பயன்படுத்தும் எல்லாவகை பொருட்களிலும், பல வகையான புதிய தொழில் நுட்பங்கள், நாளுக்கு நாள் தொடர்ந்து புகுத்தப்பட்டு, பொருளின் செயல்படும் திறன் மென்மேலும் வளர்க்கப்பட்டு வருகிறது.  "மாற்றம் ஒன்றே நிரந்தரம்" என்பதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு.

எல்லா வகை தண்ணீர் கொதிகலன்களிலும் தண்ணீரை சூடு ஏற்ற, சூடு ஏற்றுவதற்கான சுருள் (coil) மற்றும் அதற்கான தொட்டி ஆகியவை உள்ளன.

தண்ணீரை சூடேற்றி, அதில் தண்ணீரை சேமித்து வைப்பதால், சுருள் மற்றும் தொட்டி ஆகியவை தண்ணீரில் இருக்கும், வேதியல் தன்மையால் அரிப்பு ஏற்படுகிறது.  இதனால் பொருளின் ஆயுள் சுருங்கி விடுகிறது.

தண்ணீர் கொதிகலனின் ஆயுளை நீட்டிக்க பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிதாக அவற்றில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் பட்டியல்:

1.  கண்ணாடி துகள்களை, சூளையில் சூடேற்றி, அவற்றை, கொதிகலன் தண்ணீர் தொட்டியின் உள்புறம் பூசுவது. இதனால், தாமிரத்தாலான தொட்டி, அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

2.  சுமார் 850 டிகிரி சென்டிகிரேட் வெப்பச் சூழலில், போர்சலின் தண்ணீர் தொட்டியின் உட்புறம் பூசப்படுகிறது.  இதனால் தாமிரத்தாலான தொட்டி, அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

3.  Super Polymer High Performance (SPHP) தொட்டியினுள் பூசுவதன் மூலம், கடினத்தன்மை கொண்ட நீரினால் ஏற்படும் அரிப்பு தடுக்கப்படுகிறது.

4.  உருக்கிப் பிணைத்தல் (Welding) முறையில் புதிதாக புகுத்தப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் அரிப்பு ஏற்படுவதை தடுப்பது.

அறிவாற்றல் கொண்ட தண்ணீர் கொதிகலன்:


IoT மற்றும் Alexa போன்ற புதிய தொழில்நுட்பங்கள் தண்ணீர் கொதிகலன் செயல்பாடுகளிலும் புகுத்தப் படுகின்றன.

இதனால் அவை மின்சேமிப்பு மட்டுமல்லாது, செயல்பாட்டிலும் அறிவாற்றல் கொண்டதாக, பயன்படுத்துபவர்களின் தேவைக்கு ஏற்ப செயல்படுகிறது.

பாதுகாப்பு சிறப்புகள்:


தண்ணீரும் மின்சாரமும், ஒன்றோடு ஒன்று ஒரே இடத்தில் பயன்படுத்துவது என்பது ஒரு அச்ச சூழலை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்து பயன்படுத்துவது, மனித வாழ்க்கையின் கட்டாய தேவை என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

குளியலறை தண்ணீர் கொதிகலன்கள் பொருத்தவரை, பாதுகாப்பு சிறப்புகள் அமல்படுத்தப்படும் என பார்க்கலாம்:

1.  மின் கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின்கலத்தின் செயல்பாட்டை தடுக்கும் விதமாக, உள்கட்டமைக்கப்பட்ட ELCB உடன் கூடிய கலன்கள்.

2.  குழந்தைகள், கொதிகலன் இயக்காத வண்ணம், சிறப்பு தடுப்பு முறைகள்.

3.  கொதிகலன் தொட்டியினுள் சிறப்பு பூச்சிகளை மேற்கொள்வதன் மூலம், தொற்றுக்கிருமிகள் சேமித்து வைத்த தண்ணீரில் ஏற்படாத வண்ணம் தடுத்தல்.

4.  கொதிகலன் மீது தவறுதலாக தண்ணீர் பட்டு விட்டால், அத்தகைய தண்ணீர் விழுவதை எதிர்கொண்டு தாங்கும் விதமான வடிவமைப்பு (Ingress Protection (IP) Design).

5.  கொதிகலன் தொட்டியினுள் தண்ணீரின் சூடு குறிப்பிட்ட அளவைத் தாண்டினால், உடனடியாக செயல்பாட்டை துண்டிக்கும் விதமான வடிவமைப்பு.

6.  தண்ணீரின் அழுத்தம், கொதிகலன் தொட்டியினுள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சென்றால், அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சிறப்பு வடிவமைப்பு.

7.  தண்ணீர் தொட்டியைச் சுற்றி, வெப்பம் தேவையில்லாமல் வெளியேறுவதை தடுக்கும் விதமாக, PuF தொழில்நுட்ப மேற்புற கட்டமைப்பு.

இறுதியாக:


தண்ணீர் கொதிகலன் வாங்குவதற்கு முன்பாக, உங்களது தேவை என்ன என்பதை தெள்ளத்தெளிவாக பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.  அந்தப் பட்டியலில், பாதுகாப்பு என்ற ஒன்றை தலையானதாக கொள்ளுங்கள்.  நாளொன்றுக்கு எவ்வளவு நபர்கள் அந்த கொதிகலன் பயன்படுத்தி குளிக்கப் போகிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.  

வாய்ப்பு இருந்தால், ஞாயிறின் திறனில் (Solar Energy) இயங்கும் தண்ணீர் கொதிகலன் நிறுவிக்கொள்ளுங்கள்.


Share this Post:

தொடர்பான பதிவுகள்: