ஓசூர் மாமன்ற உறுப்பினர் N S மாதேஸ்வரன் பங்கேற்ற, ஆஞ்சநேயரை குளிர்விக்கும் வினோத சடங்கு! புத்தாண்டு பிறக்கும் போது, ஆஞ்சநேயரின் மனம் குளிரும் வகையில், கடலைக்காயை அவர் மீது எரிந்து வழிபட்டால், நாடு செழிக்கும், உழவு செழிக்கும் என்பது நம்பிக்கை. தொன்மையான பண்பாட்டில் நடத்தப்பட்ட இந்த திருவிழா, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இதுபோன்ற வழிபாடுகள் நடைபெறுவது இல்லை என இந்த வழிபாட்டு முறை குறித்து அறிந்தவர்கள் ஓசூர் ஆன்லைனிடம் கூறினர்.
ஒசூரில் புத்தாண்டையொட்டி, நாடு நலம்பெற வேண்டி, உழவு செழிக்க வேண்டியும், தொண்மையான பழக்கவழக்கங்களின் படி, அறுபத்து ஏழாவது ஆண்டாக கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஆஞ்சநேயர் சுவாமி மீது கடலைக்காயை எரிந்து வழிபாட்டை மேற்கொண்டனர்.
ஒசூர், ராயக்கோட்டை சாலையில், மீரா மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ள, ராஜகணபதி நகரிலுள்ள புகழ்பெற்ற, ராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் இன்று காலை 10 மணி அளவில் அறுபத்து ஏழாவது ஆண்டு கடலைக்காய் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று இந்த கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற விழாவில், ஆஞ்சநேயருக்கு காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர் கடலைக்காய்க்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த நம்பிக்கையாளர்கள் கடலைக்காயை, ஆஞ்சநேயர் பிரகாரத்தின் மீதும், ஆஞ்சநேயர் சாமியின் மீது எரிந்து வழிபாடு நடத்தினர். இதில், ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் NS மாதேஸ்வரன், ஊடக நண்பர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.








