பாகலூர் சாலையின் அந்த ஒன்னே முக்கால் கிலோ மீட்டர் பகுதி சாலையை சீர் செய்வதாக சொல்லி 60 நாட்கள் கடந்த நிலையில், இன்றைய நிலை என்ன என்று நேரில் சென்று பார்த்தோம். அரசு உயர் அதிகாரிகள் அந்த சாலை பணிகளை ஆய்வு செய்வதாக செய்தித்தாள்களில் செய்தி வந்தாலும், எம்மால் எவ்வித பணிகள் நடப்பதையும் கண்ணால் காண இயலவில்லை. அந்த 1.75 கிலோ மீட்டர் சாலைப் பகுதியில் காட்சிகளை உங்களது பார்வைக்கு வழங்குகிறோம். உங்கள் கண்களால் ஏதாவது சாலை பணிகள் நடப்பது கண்டறிய முடிந்தால், தயவு செய்து கமெண்ட் செக்ஷனில் பதிவிடுங்கள்.
ஓசூர் பாகலூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் நகரின் நடுவே செல்லும் அந்த 1 3/4 கிலோ மீட்டர் பகுதி, குண்டும் குழியுமாக கிடந்த நிலையில், பலரின் உயிரை காவு வாங்கி, பலரின் கை கால்களை உடைத்து தனது இயலாமையை கடந்த பல ஆண்டுகளாக வெளிக்காட்டி வந்தது.
அப்பகுதியில் குடியிருக்கும் மற்றும் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், தொடர் போராட்டம் மற்றும் கண்டனங்கள் பதிவு செய்ததன் விளைவாக, சாலையை சீர் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒன்னே முக்கால் கிலோ மீட்டர் பகுதி சாலையை சரி செய்வதற்கு 12 கோடியே 80 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணிகள் துவங்குவதற்கு பூமி பூஜையும் கடந்த மே 19ஆம் நாள் நடைபெற்றது.
சாலை பணியை 90 நாட்களுக்குள் முடிகிறதா வந்து சொல்லி இருந்தாங்க. இப்ப கிட்டத்தட்ட 60 நாட்கள் கடந்த நிலையில், 15 விழுக்காடு வேலைகள் நிறைவு அடைந்திருக்கு. ஒகேனக்கல் திட்ட குடிநீர் குழாய்கள், இந்த சாலை பணிகளை மேற்கொள்வதில் இடையூறாக இருப்பதாக கடந்த நாள் செய்தித்தாள்களில் செய்தி வெளிவந்துள்ளது. இது குறித்து ஓசூர் ஆன்லைன் சார்பில், ஆவல பள்ளி அக்கோ குடியிருப்பு பகுதி சமூக ஆர்வலர் திரு சங்கர் அவர்களிடம் வினவிய போது, அவர் நம்மிடம் எழுப்பிய எதிர் கேள்வி என்னவென்றால்
"ஒகேனக்கல் திட்டம் என்பது 15 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. பாகலூர் சாலையின் இந்த ஒன்னே முக்கால் கிலோ மீட்டர் வழியாக இந்த குழாய்கள் செல்கின்றன என்பது, சாலையை சீர் செய்வதற்கு சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆன திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய தமிழ்நாடு அரசிற்கும், ஒப்பந்தம் வழங்கிய நெடுஞ்சாலை துறைக்கும், ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும். 90 நாட்களில் வேலையை முடிக்கிறேன் என்று கூறிவிட்டு, அறுபதாவது நாளில் இத்தகைய சாக்குப் போக்குகள் சொல்வது, ஏற்புடையதாக இல்லை" என்று தெரிவித்தார்.








