ஓசூரில் தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் தொலை தொடர்பு என பல்வேறு அமைப்புகளால் நடைபெற்று வருகின்றன.
ஒருபுறம் இவை அனைத்தும் ஓசூர் வாழ் மக்களின் நலனுக்காகவும், ஓசூரில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உதவுவதற்காகவும் என்று இருந்தாலும், சாலையை தோண்டி தங்களது பணியை முடித்தவுடன், அதை சீர் செய்ய வேண்டும் என்கிற நோக்கம் எந்த துறைக்கும் இருப்பதாக தெரியவில்லை.
ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ராயக்கோட்டையை இணைக்கும் சாலை, சுமார் ஓர் ஆண்டுக்கு மேலாக, பழுதடைந்த நிலையில் ஓசூர் மாநகராட்சியால் எவ்வித நடவடிக்கையும் இன்றி விடப்பட்டுள்ளது.
நாளொரு பொழுதும், சரக்குந்துகள், தோண்டப்பட்டு சீர் செய்யப்படாமல் விடப்பட்டுள்ள இந்த சாலை குழிகளில் சிக்கி, வண்டி உரிமையாளர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் கடுமையான பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்.
பழுதடைந்த இந்தச் சாலை, தொழில் முனைவோரையும், உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வரும் பொது மக்களையும், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு வரும் மக்களையும் கடுமையாக பாதிக்கிறது.
ஓசூர் மாநகராட்சி இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி, சாலையை சீர் செய்து தரும்படி தொழில்முனைவோரும், பொதுமக்களும், தன்னார்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.








