Hosur News, ஓசூர் செய்திகள் - காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் கண்ணன்

கடந்த நவம்பர் இருபதாம் நாள், பிற்பகல் ஒரு மணி அளவில், நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து, கொடூரமான முறையில், வீச்சருவாளால், கண்ணன் என்ற வழக்கறிஞரை, உடன் பணியாற்றிய பெண் வழக்கறிஞர் சத்தியாவதி என்பவரது கணவர் ஆனந்த் குமார், தாக்கினார்.  இந்த தாக்குதலில், படுகாயமுற்ற, வழக்கறிஞர் கண்ணனை, அவருடன் பணியாற்றும் வழக்கறிஞர்கள், ஆட்டோவில் ஏற்றி, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி மருத்துவம் வழங்கினார்.  பின்னர் அவரை, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் உள்ள, காவேரி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஓசூரில் அருவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட வழக்கறிஞரின் நிலை, இப்போது என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வழக்கறிஞர் கண்ணன், உடல்நிலை மெல்ல மெல்ல, சீரடைந்து வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தந்து வருவதாக, வழக்கறிஞர்கள், ஓசூர் ஆன்லைனிடம் தகவல் பகிர்ந்து கொண்டனர்.

துவக்கத்தில் வென்டிலேட்டர் உதவியுடன், அவர் மருத்துவம் பெற்று வந்ததாகவும், இப்போது வெண்டிலேட்டர் கருவிகள் அகற்றப்பட்டு, வழக்கறிஞர் கண்ணன் உடல் நலம் தேடி வருவதாகவும், செய்திகள் கிடைக்கப்பெறுகிறது.

பெயர் குறிப்பிட விரும்பாத, மருத்துவமனை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர், இது குறித்து கருத்து கூறும் பொழுது, காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், இந்த குறிப்பிட்ட மருத்துவ தேவையை, ஒரு சவாலாக ஏற்று, தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர், எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ஓசூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ரூபாய் மூன்று லட்சத்து முப்பத்தி நான்காயிரம், கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக, ரூபாய் இரண்டு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் மற்றும் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, Fedaration சார்பாக ரூபாய் ஒரு லட்சம், என மொத்தம் ரூபாய் ஏழு லட்சத்து ஒன்பதாயிரம் மருத்துவச் செலவினங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

பண உதவி வழங்கிய ஓசூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே ஆனந்தகுமார், சங்கத்தின் பொறுப்பாளர்கள் திம்மராயப்பா, கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர்கள் கோவிந்தராஜூலு, சக்தி நாராயண், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அதன் அலுவலக பொறுப்பாளா்கள், என் மாரப்பன், முரளிபாபு ஆகியோருக்கு வழக்கறிஞர் கண்ணன் குடும்பத்தினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் கண்ணனை தாக்கிய ஆனந்தகுமார், மற்றும் அவரது மனைவி சத்தியாவதி, ஆகிய இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை எந்த வழக்கறிஞரும், இந்த இருவருக்காக, பிணை வேண்டி விண்ணப்பிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this Post:

Hosur News, ஓசூர் செய்தி பதிவுகள்: